Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, November 1, 2022

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு

 பல சமயங்களில் நாம் பெறும் சில உணர்வுகளை  நம்மால் சொல்லில் வடிக்க முடியாத போது  அதை அப்படியே படம் பிடித்தது போல் ஒருவர் வார்த்தைகளில் உருவகித்து விட்டால் நம்முடைய இயலாமை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் பழமொழி. ஆங்கிலத்தில் இதை " Face is the index of the mind' என்பர். ஆனால் பிராணிகளின் கண்களில் நாம் காணும் உணர்வுகளை எப்படி உள் வாங்குகிறோம்?

ஒரு பசுவின் கண்களில் இருக்கும் அமைதி, மானின் கண்களில் உள்ள மிரட்சி, புலி அல்லது சிங்கத்தின் கண்களில் காணப்படும் தன்னம்பிக்கை  என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  அவைகளுடைய குட்டிகளின் கண்களில் தெரியும் ஒரு அப்பாவியான கண்ணோட்டத்தை எப்படியெல்லாம் கார்ட்டூன் படங்களில் சித்தரிக்கின்றனர் என்பதை பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

சமீபத்தில் ஒரு சிம்பன்சி குரங்கை கணினியில் வரைந்து பல வாட்ஸாப் குழுமங்களில் பகிர்ந்து கொண்டேன்.  பலரும்  அதன் கண்களை மிகவும் சிலாகித்து நல்ல உயிரோட்டத்துடன் இருக்கிறது என்று பாராட்டினர்.  இதற்கான காரணம் கீழ்கண்ட  மேற்கோளை கண்டபின் தான் நமக்குள் எழுகின்ற உணர்வுக்கு  எப்படி உருவகம் கொடுத்துள்ளார் என்பது புரிந்தது.

If we look straight and deep into a chimpanzee's eyes, an intelligent self-assured personality looks back at us. If they are animals, what must we be?”
― Frans de Waal


மனிதர்களின் மரபணுக்களில் 98 விழுக்காடு ஒத்துபோகும் மனிதக் குரங்குகளின் வாழ்க்கைமுறையும் கூட்டுக் குடும்பமாகவே காணப்படுகின்றன. அவைகளின் ஆயுளும் 60 வயது வரை நீடிக்கும்.

மனிதர்களுக்கும் சிம்பன்சி குரங்களுக்கும் சில பொதுவான குணங்கள் உண்டு என்கின்றனர்.  

 அனுதாபம் :  சிம்பன்சிகளுக்கும் சந்தோஷம், குறும்பு, விளையாட்டு போன்ற குணங்கள் உண்டு. கூடவே  பிறனுடைய கஷ்டத்தை தம்முடையதாக பாவிக்கும் பண்பும் உண்டு.  உதாரணத்திற்கு அனாதரவான இளம் குட்டிகளை தத்து எடுத்து தம் அரவணைப்பில் வளர்க்கும் குணமுடையன இவை. ஆபத்துகாலத்தில் மனிதர்களின் உதவிக்கும் விரைந்து செயலாற்றக் கூடியன.

பெரியோருக்கு மரியாதை : கூட்டுக்குடும்பம்  நிலைத்து நிற்க இது மிகத் தேவை போலும். மூத்த உறுப்பினர்கள் இளம் தலைமுறைக்குத் தேவையான வாழ்க்கை முறை அனத்தையும் கற்றுத்தருகின்றன. பிறந்ததிலிருந்து சில வருடங்கள் வரை தாயினுடைய அணைப்பிலேயே வளருகின்றன. 

இவைகளின் முகம் மற்றும் கைகளின் உரோம வளர்ச்சி அல்லது வர்ண மாற்றங்களைக் கொண்டு அவைகளின் வயது வித்தியாசப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறதாம். முக்கியமாக தக்க வயதினரிடையே இனச்சேர்க்கைக்கு இது ஒரு முக்கிய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறதாம்.

பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலும் மிக புத்திசாலித்தனமாகவும் கூட்டு முடிவு எடுப்பதிலும் மனித குரங்குகள் தம் தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன. பல சமயங்களில் தேவைப்படும் போது காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே பிரத்யேக சாதனங்களை உருவாக்கும் திறமை வாய்ந்தவை அவை. 

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது  Frans de Waal  சொல்வது போல் " .....if they are animals what must we be? " என்று கேட்கத்தான் தோன்றுகிறது. 

 [- இவரைப் பற்றி அறிய   இங்கே சுட்டவும்   ] 

நம்ம ஊர் பழைய திரைப்படப் பாடலையும் நினைவூட்டுகிறது. " எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு"




No comments: