பேரனுக்கு விளையாடப் போகணும்.
அன்பான தாத்தா பிடிச்சு வைச்சுப் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறார்.
அவனுக்கோ தன் நிலைமையை சொல்லி புரிய வைக்க முடியாத நிலையில் சிறிது பொறுமை காட்டுகிறான். அப்போது அவன் முகபாவம் எப்படி இருக்கும் ?
இப்படி இருக்குமா ?
பெரியவருக்கான ஒரு மரியாதை கலந்த அன்பை அச்சிறுவனின் முகத்தில் காண்பிக்க தனி முயற்சி எடுத்த சித்திரம் இது.வெளிநாட்டு ஓவியங்களில் மோனலீசா வின் ( லியானார்டோ-டாவின்சி ) படத்தில் இருக்கும் -மர்மமான- புன்னகையை சிலாகித்து பல விற்பன்னர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.
அப்படி ஒரு புன்னகையை ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்பதன் வெளிப்பாடுதான் இது.
மோனாலீசா போல் இதில் ஏதும் மர்மம் இல்லை. தாத்தா பேச்சைத் தட்டமுடியாமல் ஒரு அசட்டு சிரிப்புடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறான். அவ்வளவு தான்.
முழுப்படமும் கீழே .
தாத்தாவின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பும் ஆளுமையும், சிறுவனின் மனநிலையை பார்க்க விடாமல் செய்து விடலாம் என்ற எண்ணத்தோடு முதலில் சிறுவனைத் தனியாக zoom- in செய்து பின்னர் முழு படத்தையும் போட்டிருக்கிறேன்.
இவர்கள் குஜராத் ராஜாஸ்தான் மாநிலங்களில் ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் 'ராய்கா' எனப்படும் குடியை சேர்ந்தவர்கள். சுமார் பத்து லட்சம் ஜனத்தொகையாக இருந்த இந்த குடியினர் கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு லட்சமாக சிறுத்து விட்டனராம். இதனால் ஒட்டகப் பராமரிப்பு குன்றி ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதாம். தற்போது 2019 கணக்கின்படி ராஜாஸ்தானில் 21000 ஒட்டகங்களே உள்ளன.
இந்த சீரழிவைத் தடுக்க ராஜாஸ்தானில் ஒட்டக மேம்பாட்டு ஆராய்ச்சி ஏற்படுத்தப்பட்டு இறைச்சிக்காக செய்யப்படும் ஒட்டக வதைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். ஒட்டகத்தின் பால் மிக விசேஷமான மருத்துவ குணம் கொண்டது. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கும் மிகுந்த பயன் உடையது. மேலும் படிக்க...
ஹூம் ! இந்த கதையெல்லாம் கேட்க விளையாடப் போகும் சிறுவனுக்கு ஏது நேரம் ?