Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, October 28, 2008

சித்திரம் செய்யும் வித்தைகள்

எதையும் வீணாக்க விரும்பாத குணம் மகாத்மா காந்திக்கு ரொம்பவே இருந்ததாம்.

நாம எல்லோரும் பென்ஸிலை சீவினா அதை கூராக்குவோம். ஆனால் காந்தியோ அப்படியே எழுத ஆரம்பிப்பாராம். “குடுங்க கூராக்கி தரேன்” அப்படின்னூ யாராவது சொன்னா “வேண்டாம் கூராக்கும் போது பென்ஸிலோட கரிப் பொடி வீணா போகும்” அப்படின்னு சொல்வாராம்.

வடநாட்டுல உடற்பயிற்சி கூடங்கள் எப்போதும் பிரபலம். ஆனால் காந்தி சொல்வாராம் ‘உடற்பயிற்சியில் மனித சக்தி வீணாகிறது. அதற்கு பதில் தோட்டம் போடுவது, துணி நெய்வது போல உடல் உழைப்புடன் கூடிய செயல்களில் ஈடுபட்டால் மனித சக்தி உற்பத்தியுடன் கூடிய பயனைத் தரும், ஆரோக்கியத்துக்கும் நல்லது’. என்ன நுணுக்கமா யோசனை பண்ணியிருக்காரு அந்த மனுஷன் !

கண்ணுக்கு தெரியற மாதிரி ரொம்ப பேரு வேஸ்ட் பண்றது சாப்பாட்டு விஷயத்துலதாங்க. அதை பத்தி சிந்திக்கற மாதிரி ஒரு பதிவு மஞ்சூரண்ணன் போட்டு இருக்காரு. நேரம் கெடக்கும் போது பாருங்க.

நம்ம விஷயத்திற்கு வருவோம். போன பதிவுல சிலேட்டுல செஞ்ச கைவேலையை பார்த்தோம். இன்னும் ஒண்ணு ரெண்டு இருக்கு. கைவசம் அதனோட படம் இல்லை. அப்புறம் பார்ப்போம்.

கீழே பார்க்கிற பிள்ளையார் படம் எங்கேயோ கெடச்ச ஆஸ்பெஸ்டாஸ் துண்டுல போட்டது. ஆயில் பெயிண்ட்டிங். எனக்கு நினைவு தெரிஞ்சு ரொம்ப வேகமா வரைஞ்சு முடிச்ச படம். ஆஸ்பெஸ்டாஸ் அப்படியே ஆயில் பெயிண்ட்டை உறிஞ்சிடுது. அதனால அதிக நேரம் காய காத்திருக்க வேண்டியதில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை மறைக்கிற மாதிரி பிண்ணணியில நல்லா அழுத்தமா கறுப்பு கலர் பூசி விட்டேன்.


இந்த படத்துல ரொம்ப பிடிச்ச விஷயம் தும்பிக்கைக்கு கீழே நிழலோட போக்கு. அப்படியே வளைஞ்சு பிள்ளையாரோட தொப்பையிலே கீழ் பார்த்த மாதிரி நிழலோட்டம் போகுதே அது தான்.



படம் போடறதுக்கு இப்படிபட்ட பேப்பர், இல்லை, கான்வாஸ்தான் வேணும்னு இல்லை.

நாம நம்ம ஜாலிக்காகத்தான போடறோம். அதனால கையில கிடைச்ச எதில வேணும்னாலும் போட்டு வெளையாடலாம்.

இரண்டரை அடி நீளம் மூணு அங்குலம் அகலத்துல தூக்கிப் போட கெடந்த ஒரு தெர்மோக்கோல் துண்டுல இப்ப எலிகளெல்லாம் ஜாலியா சங்கிலியில ஏறி இறங்கி விளையாடற மாதிரி ஒரு படம் போட்டு வீட்டுல சும்மானுச்சுக்கும் மாட்டி வச்சிருக்கேன்.

நாம நெனச்சா எதுவுமே ஆர்ட்தாங்க ! எப்பவோ காணாம போயிரு்ந்திருக்க வேண்டிய ஆஸ்பெஸ்டாஸ்ஸும் தெர்மோக்கோலும் துண்டெல்லாம் இன்னும் பத்திரமா இருக்குன்னா அது ‘சித்திரம் செய்யும் வித்தை’ தானுங்களே !

மிச்ச சரக்கை அடுத்த பதிவுக்கு ரிசர்வ் பண்ணி வச்சுக்குவோம்.

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

Wednesday, October 8, 2008

கிருஷ்ணருக்கு பாலீஷ் போடணும்

பள்ளிகூடத்தில எங்க வாத்தியாரு ஒருத்தரு சொன்னது அப்படியே மனசுல நின்னிடிச்சு.

”உபயோகமில்லாதவன்னு ஒருத்தனும் கிடையாது உபயோகமில்லாத பொருள்-ன்னு ஒண்ணும் கிடையாது.வேணும்னா நமக்கு பயன்படுத்திக்கத் தெரியலேன்னு வைச்சுக்கலாம்”

அப்போதிலிருந்து யாராவது ஏதாவது வேஸ்ட்டானப் பொருளை வச்சு இதை செய்யறாங்க அதை செய்யறாங்கன்னு தெரிஞ்சா அதை ரொம்ப ஆர்வமா பார்த்து, இல்லே படிச்சு தெரிஞ்சுக்குவேன்.

ஒரு தடவை உடைஞ்சு போன சிலேட்டு துண்டு கொஞ்சம் மனுசனோட மூக்கு மாதிரி தோணிச்சு. எங்கம்மா ஏதோ பத்திரிக்கையில வந்த ஒரு கட்டுரையில ஒரு பெண்மணி முட்டை மேல பெயிண்டிங், பழைய துணியில கைப்பை, சிலேட்டுல சிற்பம் எல்லாம் செய்யறாங்கன்னு எப்பவோ படிச்சு சொன்னது ஞாபகம் வந்திருச்சு. அதனால இதை வச்சு எதையாவது செய்யலாமேன்னு நினைச்சேன். சொன்னதுக்கும் நான் செஞ்சதுக்கும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷ இடைவெளி.

ஒரு சின்ன கத்தி எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா ராவி மூக்குக்கு கீழே வாய்,முகவாய், கழுத்து எல்லாம் வர்ற மாதிரி செஞ்சேன். அப்புறம் தலைப்பக்கத்தை ஜடாமுடிபோல கத்தியோட கூர் பகுதியால கீறிவிட்டேன். முடிமேல ஒரு சின்ன வளைசல் கொடுத்து ஒரு பிறைச் சந்திரன். திருநீறு, கங்கை,கண்,கழுத்தில பாம்பு எல்லாமும் சிம்பிள் கீறல்கள்தான்.

இது சிவன்.கடைசியா நைஸான உப்புத்தாள் வச்சு ஓரத்தையெல்லாம் மழுங்க தேய்ச்சு விட்டேன். அவருடைய தலையில ஒரு சின்ன துளையை போட்டப்புறம் வால்-ஹாங் சிவனாயிட்டார்.


பல ஊர் மாற்றல்கள், வீடு மாற்றல்களுக்கிடையில் அதை பத்திரமா பாதுகாத்தது எங்கம்மாதான். குழந்தைகள் மேல உள்ள பாசம் அப்படி செய்ய வச்சது போலிருக்கு. அதனாலத்தான் முப்பது வருஷத்துக்கு பிறகும் அதை எல்லோருக்கும் காமிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாயிருக்கு. நல்லாயிருக்குன்னு நீங்க நெனச்சா அதோட முழு பெருமையும் அவங்களுக்குதான்.

சிவனார் கொடுத்த தைரியத்தில, சும்மா கிடந்த ஒரு முழு சிலேட்டையே எடுத்து குழலூதும் கிருஷ்ணரா செதுக்கிப் பார்த்தேன். மோசமில்லைன்னு எல்லோரும் சொன்னாங்க. இதுக்கு தேவைப்பட்டது ஒரு அகலமான திருப்புளி. அதுதாங்க ஸ்க்ரூடிரைவர். முளையைத் திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் உளி போன்ற அடிப்பக்கம் உடையது. அழகான செட்டிநாட்டு சொல்வழக்கு.

திருப்புளி வைத்து சுரண்டினால் சுற்றிலும் சிலேட் தூள் பறக்க, ”வெளியே போய் சுரண்டுடான்னு’ திட்டு வாங்கி வராண்டாவில் கிரிகெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டே சுரண்டி முடிச்சேன். இதிலே கவனிக்க வேண்டியது சுரண்டுற ஆழம் ஒரே அளவா இருக்கணும். ஒரு இடத்துல அதிகம் ஒரு இடத்துல கொறஞ்சு போகாம இருக்கணும்.

சிலேட் மேல் பகுதி ஒரே அளவு கறுப்பாக இல்லாமல் திட்டுத்திட்டா இருந்ததால கிருஷ்ணரையும் மாட்டையும் பார்த்தால் ல்யூகோடெர்மா வந்த மாதிரி இருந்தது.அப்போ தம்பி ஒரு ஐடியா குடுத்தான். ”ப்ளாக் கலர் ஷூபாலிஷ் தேச்சு விடு”. சரின்னு பாலிஷ் எடுத்து நல்லா அழுத்தி தேய்ச்சு ஒருவாட்டி ப்ரஷ்னால பளபளபாக்கி அந்த குறையையும் அட்ஜஸ்ட் பண்ணியாச்சு.
கடைசியா திரும்பவும் நடுவில வர்ற கோடுகளையெல்லாம் கீறி ஓரளவு ஆமா இது கிருஷ்ணர்தான்-ன்னு ஒத்துக்கற மாதிரி செஞ்சு வச்சேன்.

இப்போ படம் பிடிச்சப்பறம் பாத்தா இன்னொரு தடவை பாலிஷ் போடணுமோன்னு தோணுது. முப்பது வருஷம் ஆயிடுச்சே!!

Monday, September 29, 2008

ஜெஸ்ஸோ வாணி!.....நீ அருள்வாய்

அது என்ன ஜெஸ்ஸோ வாணி அப்படின்னு கேக்கறது காதில விழுகுது.

கடந்த பதினைஞ்சு நாளா ஒரே ஜெஸ்ஸோ ஜபம்தான் போங்க!

”கொஞ்சம் ஜெஸ்ஸோ கலக்கிக் குடுங்க”
“இன்னும் கூட ஜெஸ்ஸோ நல்லா போட்டிருக்கணும்”
“பிரஷ் காஞ்சுபோயிடுது. ஜெஸ்ஸோ வளைஞ்சு குடுக்க மாட்டேங்குது”

இதெல்லாம் தினம் நடக்கிற உரையாடல்.

ரொம்ப நாளா டிராயிங் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலையேங்கற ஆதங்கம் இருந்தது.

சமீபத்தில ஒரு மைசூர் பெயிண்டிங் பயிற்சி வகுப்புகள் அரசாங்க ஆதரவுல பதினைந்து நாளைக்கு நடத்தினாங்க. “அப்பா நான் சேர்ந்துக்கறேம்பா, 750 ரூபா” அப்படின்னு மகள் கேட்டப்போ “அட! என்னை விட்டு நீ மாத்திரம் போயிடுவியா”ன்னு நானும் களத்துல இறங்கிட்டேன். அப்பாவும் பொண்ணும் ஒரே வகுப்பிலே! தினம் மூணு மணி நேரம்.

பிரஷ் அடிப்பலகை எல்லாம் நாம கொண்டு போகணும். பாக்கி சாமான் எல்லாம் அவங்களே குடுத்தாங்க. என்ன ஒண்ணு ! கையில ”திருவோடு”( செராமிக் டயில்) ஏந்திக்கிட்டு “கொஞ்சம் ப்ளூ குடுங்க, கொஞ்சமா எல்லோ குடுங்க” அப்படின்னு அடிக்கடி பிச்சையெடுக்க வேண்டியிருந்தது.

முதல்ல படம் ட்ரேஸ் பண்ணிக்கணும். அப்புறம் அவங்க ஒரு கோந்து கொடுப்பாங்க. அதை எங்கெல்லாம் தங்கம் வரணுமோ அங்கெல்லாம் பூசணும். அதுக்கு கம் அராபிக் அப்படின்னு சொல்றாங்க. அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஆனா ட்ரேஸ் பண்ணி கோந்து பூசறதுக்கே முதல் நாள் சரியா போச்சு.


அரபிக்-கோந்து தடவப்பட்ட முதல் நிலை

இரண்டாம் கட்டம் ஜெஸ்ஸோ. அதாவது Gesso. இது தான் ரொம்ப கிரிடிகல் சமாச்சாரம். எவ்வளவு கிரிட்டிக்கல்ங்கறது சொல்லாம விட்டதுனால படத்தை சொதப்பினவங்க ரொம்ப பேரு. அதுல நானும் ஒருத்தன்.

ஜெஸ்ஸோ ஏன் முக்கியம்னா, படத்துல நகை, சிம்மாஸனம், மண்டபம் போல தங்கம் வர்ற இடத்தில எல்லாம் முப்பரிமாண உணர்ச்சியை கொடுக்கிறதுக்கு அதுதான் அடிப்படை. சுண்ணாம்புத்தூள்-கம் அராபிக் ரெண்டையும் குழைச்சு கெட்டியா இருக்கிற சமாச்சாரம் அது. காஞ்சு போச்சுனா கல்லு மாதிரி ஆயிடும் அசைக்க முடியாது.

பல தாய்மார்கள் மருதாணி போட்டு பழகின கைகளோ என்னவோ ரொம்ப அழகா கெட்டியா டிசைன் டிசைனா போட்டிருந்தாங்க. எனக்கு அந்த கெட்டி சரிபட்டு வராததால அதை குறைக்க தண்ணிய தொட்டுத் தொட்டு போட்டேனா, காஞ்ச பிறகு எடுப்பாத் தெரியலை. “பரவாயில்லைவிடுங்க. அதுக்கு லைனிங் குடுத்துறலாம் அப்படின்னு ஆறுதல் சொன்னாங்க சிலர்.


கிரீடம், சிம்மாஸனம் நடுவிலே வெள்ளையாக டிசைன் தெரியுதே அதுதான் ஜெஸ்ஸோ

நாலு நாள் இதிலேயே ஓடிப் போச்சு. அடுத்தது தான் க்ளைமாக்ஸ். தங்கம் பூசணும். கொஞ்சம் வசதிப் பட்டவங்க தங்க சருகு வாங்கி வந்து அதை அப்படியே ஜெஸ்ஸோ மேலே அழுத்தி பதிஞ்சாங்க. இதுக்கு தனியா கையிலேந்து 400 ரூபா செலவழிக்கணும்.

நானும் என்பெண்ணும் அவங்க குடுத்த தங்கப் பொடியிலே பிரஞ்ச் பாலிஷ் கலக்கி ஜெஸ்ஸோ மேலேயே அவங்க சொன்ன மாதிரி பூசி விட்டோம்.
”நீங்க சீக்கிரம் சீக்கிரமா தடவணும். பிரெஞ்ச் பாலிஷ் ஆவியாப் போயிடும். அப்புறம் தங்கம் கறுத்துப் போயிடும் ” அப்படின்னு அவங்க சொல்லப் போயி தடவின அவசரத்துல எங்கே பூசினோம், எதுக்கு பூசினோம் ஒண்ணும் புரியலை.

இதுல பலருக்கும் பல குழப்பங்கள். “அய்யய்யோ அது சாமியோட பின்னாடி இருக்கிற கையிங்க அங்கேயும் கோல்டு போட்டுட்டீங்களே” அப்படின்னு ஒரு கேஸ். இன்னும் சில பேர் அம்மனுக்கு தலைமுடி வர்ற இடத்துல தங்கமுடியாக்கி வச்சிருந்தாங்க.

ஒரு வழியா கிரிடிகல் ஸ்டேஞ் தாண்டி நமக்கு பழக்கமான வர்ணம் பூசுற வேலை
ஆரம்பிச்சுது. அவங்க சொன்ன எடத்துல சொன்ன வர்ணத்தை பூசினேன். நான் ரொம்ப கீழ்படிந்த மாணவன். எதிர் கேள்வியெல்லாம் கேட்க மாட்டேன். அப்புறம் ஒரு மூணு நாள் வகுப்புக்கு மட்டம். கீழ்படிதலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அர்ஜெண்ட் வொர்க் வெளியூர் போகவேண்டியிருந்தது.


வகுப்புக்கு மட்டம் போடுவதற்கு முன்வரை

அப்புறம் சின்னச் சின்ன நுணுக்கமான காரியம். அவங்க அப்பப்போ யோசிச்சு புதுசு புதுசா ஐடியா குடுப்பாங்க. அதை செஞ்சுக்கிட்டே வரணும். இதிலே காத்துக்கிட்டு இருக்கிற நேரம்தான் ஜாஸ்தி. ஒருவழியா கரக்டா பதினைஞ்சு நாளில முடிச்சாச்சு.



நிறைய பேர் பத்து நாளிலேயே முடிச்சுட்டு போயிட்டாங்க. நாற்பது பேர் இருந்த
வகுப்பில கடைசி வரைக்கும் இருந்த பத்து (மக்கு) மாணவர்களில் நானும் ஒருத்தன். கடைசியா ஒரு சர்டிபிகேட்டும் குடுத்தாங்க. அதுல என் மகளுக்கு ஏக சந்தோஷம்.


என் மகள் வரைந்த பிள்ளையார். அதில ஜெஸ்ஸோ நல்லா எடுப்பா தெரியுது பெரிசாக்க்கிப் பாருங்க.






அனைவருக்கும் ஜெஸ்ஸோ ஆனைமுகத்தான் அருளும் ஜெஸ்ஸோ சரஸ்வதியின் அருளும் இந்த நவராத்திரியில் பொங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Monday, August 25, 2008

சித்திரமும் (தும்பிக்) கைப் பழக்கம்

ஒரு யானை பிரஷ் எடுத்து தும்பிக்கையால் படம் பொடும் செய்தியை டெக்கான் ஹெரால்ட் பத்திரிக்கையில் பார்த்தபோது அதை பத்திரப்படுத்தி வைத்தேன். ஏதோ ஒரு வித்தியாசமான யானை போல இருக்கு என்று நினைத்தேன்.



அப்புறம் அதை யூ ட்யூபில் தேடினால் அங்கே பெரிய யானைப் பள்ளிக்கூடமே இருக்கு.

அங்கேன்னு சொன்னது தாய்லாந்துலே.

பத்திரிக்கையில் வந்திருப்பது சின்ன துக்கடாதான். கீழே பாருங்க. ஒரு யானை எவ்வளவு அழகா படம் போடுது.



இதைப் பார்த்தப்புறம் யூ.ட்யூப் க்கு போனா இன்னும் நெறைய யானைங்க படம் போடுறதை பார்க்கலாம்.

Wednesday, August 6, 2008

நான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு

கௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வருமே அதை நெனச்சு பாடினது தான் இந்த தலைப்பு. ஏனப்படிங்கிறத அப்புறம் சொல்றேன்.

முதல் முதலா பேஸ்டல் கலரில் கைவச்சபோது ரொம்ப திண்டாடி போயிட்டேன் அப்படின்னு சொன்னது சில பேருக்கு நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு மாசம் கஷ்டப்பட்டு தேறினப் படம். அப்போ அந்த கிளி படம் கைவசம் இருக்கவில்லை. இதோ இப்ப போட்டாச்சு. லேமினஷனால் கொஞ்சம் மங்கிப் போனாலும் அதுக்கு ஒரு இடம் வீட்டில கொடுத்திருக்கோம்.



கொஞ்சம் நாள் கழித்து ஒரு புகைப்பட சஞ்சிகையில் மூன்று கிளிகள் மரப் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கிற படம் உடனேயே நச்சுன்னு மனதிற்குள் புகுந்து கொண்டது. கிட்டத்தட்ட ஒன்றைரை மணி நேரத்திற்குள் அதை பேஸ்டல் வர்ணத்தில வரைந்து விட்டேன்.

ஒரு மாசம் எங்கே ஒன்றரை மணி எங்கே!

இந்த முறை வேண்டுமென்றே வர்ணத்தையெல்லாம் ஸ்மட்ஜ் எல்லாம் செய்யவில்லை. வர்ணம் எப்படி இயற்கையாக கை அழுத்தத்திற்கு ஏற்ப வரைதாளில் பற்றிக்கொண்டதோ அதன் போக்கில் விட்டு விட்டேன்.

படம் பத்தடி தூரத்திலிருந்து பார்த்தபோது எடுப்பாக இருந்தது. மீண்டும் லேமினஷன் செய்ய தைரியமில்லை. ”இத்தாலிய கோல்டு” சட்டம் வாங்கி அந்த கிளிகளை அடைத்து வைத்தேன். பலருக்கும் பிடித்த படமாயிருந்தது.

கூண்டில் அடைத்தாலும் வேளை வந்தால் பறந்து போயிடும்.

அமெரிக்காவிலிருந்து புதிதாக கல்யாணமான தம்பதிகள் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பரிசு என்ன தருவதென்று குழம்பிய போது இந்த படத்தை பாராட்டியதைக் கண்டு அதையே தூக்கி கொடுத்து விட்டாள் என் சகதர்மிணி. 'அப்பா! ஒண்ணை ஒளிச்சு கட்டியாச்சு'னு சந்தோஷமோ என்னமோ அவளுக்கு. :-)

அந்த கிளிகள் அமெரிக்காவிற்கு பறந்து போயாச்சு. என் வீட்டுக் 'கச்சேரி'யில் இனிமே கிடையாது. அதை நினைத்து சோகத்தோட நான் பாடிய வரிதான் நீங்க தலைப்பில் பார்த்தது.

Saturday, July 12, 2008

பென்ஸிலினுள் அடங்கிய நீர் வர்ணம்

இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்டதிலிருந்து பல அரிய தொழில் நுட்பங்கள் நம் நாட்டிற்குள் வர முடிந்தது. Faber Castle கம்பெனி அறிமுகப் படுத்தியிருந்த பென்சில் வர்ணமும் நீர் வர்ணமும் இணைந்த ஒரு தொழில் நுட்பத்தை கடையில் கண்டபோது அதைப் பரிசோதிக்கத் தூண்டியது. வாங்கி வந்தேன், ஆனால் அதை எப்போது எப்படி என்று முடிவு செய்திருக்கவில்லை.

ஃபிளிக்கரில் கண்ட ஒரு மலைக் குன்றின் படத்தை பார்த்த போது அதை கணிணியில் சேமித்து வைத்துத்திருந்தேன். பின்னர் அதைப் பார்த்து ஒரு 25cm x12 cm அட்டையில் வர்ணப் பென்ஸிலை வைத்து வரைந்து பார்த்தேன். என்னதான் விரலால் ஸ்மட்ஜ் செய்தாலும் அங்கங்கே பென்ஸில் கோடுகள் குச்சி குச்சியாய் கண்ணை உறுத்தியது. இதற்கு நான் பயன் படுத்திய அட்டையும் ஒரு காரணமாயிருக்கலாம்.



அப்போது இதையே நீர் வர்ணத்திற்கு மாற்றிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒரு சின்ன ப்ரஷ்ஷில் நீரைத் தொட்டுக் கொண்டு வேண்டிய இடங்களிலெல்லாம் ஒரு வாஷ் கொடுத்தேன். இப்போது வர்ணங்களெல்லாம் கரைந்து ஒன்றோடொன்று கலந்து ஒரு புது தோற்றம் வந்தது. குறிப்பாக இந்த மாற்றத்தை குன்றின் பின் பக்கத்தில் இருக்கும் மலைப் பகுதியில் காணலாம்.

கணிணியில் சேமிக்கப்பட்டப் படத்தையும் ஸ்கேன் செய்த படத்தையும் அருகருகே காணும் வகையில் இணைத்து கீழே காட்டியுள்ளேன். நீர் வர்ணத்திற்கு மாற்றிய பிறகு வர்ணங்கள் மூலப் படத்தை ஓரளவு பிரதிபலிப்பதைக் காணலாம். கற்பாறைகளை வேண்டுமென்றே கான்ட்ராஸ்ட்டிற்காக கொஞ்சம் செவ்வர்ணமாக விட்டுவைத்தேன்.


இந்த வகை தொழில் நுட்பத்தில் இன்னொரு வசதி, நீர் காய்ந்த பிறகு மீண்டும் பென்ஸிலினால் இன்னொரு வர்ணத்தை தேய்த்து வர்ணத்தின் அடர்த்தியைக் கூட்டலாம். ஆனால் வர்ணம் அடர்த்தியான பிறகு அதை குறைக்க முடியாது. அதனால் படிப்படியாக அடர்த்தியை கூட்ட வேண்டும். பொதுவாக வெள்ளை வர்ணப்பென்ஸில் இந்த பெட்டிகளில் இல்லாமல் போவதே குறைக்க முடியாமல் போவதற்குக் காரணம்.

இந்த மலை மஹாராஷ்ட்ராவில் எங்கோ உள்ளது என்று படித்ததாக நினைவு. ஆகவே குன்றின் மேலிருப்பது குமரன் அல்ல. அனேகமாக அவன் அன்னை, சிவாஜி போற்றிய பவானி.

Friday, June 6, 2008

எல்லாமே வயத்துக்குத் தாண்டா -2

"உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டே " என்று பள்ளியில் சண்டைப் போட்டுக் கொண்டவனுடன் -ஒருவன் காதை மற்றவன் பிடித்துக் கொண்டு- வாத்தியார் முன் தோப்புகரணம் போட்டதுண்டு. இந்த குரங்காட்டியும் குரங்கும் வாழ்க்கை பூராவுமே அப்படித்தானோ ?

அவனுக்கு குரங்கை விட்டால் வழியில்லை, குரங்குக்கும் அவனை விட்டால் கதியில்லை.

பாழும் வயிறு படுத்தும் பாடு யானையை சைக்கிள் ஓட்டச் சொல்கிறது. குரங்கை நாட்டியமாட வைக்கிறது. மனிதனை இவைகளை ஆட்டிப் படைக்கச் சொல்கிறது.

எல்லாமே வயத்துக்குத் தாண்டா! இல்லாத கொடுமைக்கு தாண்டா!!



முதலில் புகைப் படத்தைப் பார்த்ததும் வெயிலில் வாடிய குரங்காட்டியின் முகம் மேற்கண்ட பல உணர்வுகளைத் தூண்டியது. அவனது முகத்தின் சுருக்கங்களும், பெரிய அழுக்கு மூட்டையும் (அதற்குள் என்னென்ன இருக்குமோ ?) தோள் மேல் குரங்கும் அதை கட்டிப்பிடிக்கும் ஒரு தடித்த சங்கிலி கோர்த்த வார் என வண்ணக் களஞ்சியமாக காட்சியளித்தது.

எங்கோ, போன இடத்தில் கண்ட அப்படத்தை ஒரு கையில் கிடைத்த ஒரு சிறிய அட்டையில் வண்ண பென்ஸில் கொண்டு வரைந்து விட்டேன். ஊர் திரும்பிய பின் அதையே சற்று பெரிதாக்கி செய்யலாமே என்று தோன்றியது.

உடனே அதை ஸ்கானரில் போட்டு கறுப்பு வெள்ளையில் A4 தாளில் ட்ராஃப்ட் பிரதி எடுத்திக்கொண்டு வர்ணங்களை பேஸ்டல் கட்டிகளை வைத்து செய்தேன். இப்போது பென்ஸிலில் வரைந்த மூலத்தை விட பளிச்சென்று காட்சியளித்தது. அட! இதுவும் ஒரு நல்ல டெக்னிக் போல இருக்கே என்று தோன்றியது.

படத்தில் சரியாக வருமோ வராதோ என்று நான் கவலைப் பட்ட விஷயம் எது தெரியுமா ?

குரங்காட்டியின் காதில் சொருகியுள்ள பீடித்துண்டு !