Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, June 29, 2024

தவிக்கிற வாய்க்குத் தண்ணீர்....

     நாட்டின் தலைநகர், யமுனைக் கரையில் அமைந்திருக்கும், டில்லி நகரமே தண்ணீர் பிரச்சனையால் அல்லாடுகிறது.  இது வரலாறு காணாதது.  இதுவரையில் தென்னகத்தில்தான் தண்ணீரை வைத்து அரசியல் செய்து வந்தார்கள் என்று நினைத்தோம். இப்போது வடக்கிலும் ஆரம்பித்துவிட்டது.

 கோடை காலம்  வந்துவிட்டது.  விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்  கூட குடி நீர் பிரச்சனை. பலர் வீட்டுத் தோட்டங்களில் அல்லது மாடிகளில்  அகலமான பாத்திரங்களில்  வைத்து சுலபமான சேவையை செய்து வருகின்றனர்.

இதோ இந்த குருவி எப்படி கழுத்தை வளைத்து தொண்டைக்குள்  நீரை இழுத்துக் கொள்கிறது பாருங்கள்


  கோழி போன்ற சில பறவைகளுக்கு நீரை உறிஞ்சிக் குடிக்க முடியாது. கழுத்தை மேலே திருப்பி  நீரை உணவுக் குழாய்க்குள் இறக்குகின்றன.  புராணங்களில் சொல்லப்படும் சகோர பட்சியும் அப்படிப்பட்டது தானோ? அதனால்தான்  மழைத்துளியை மேலிருந்து விழும் போதே அருந்திவிடுகிறதோ!!

 சமீபத்தில் அப்படி மேலிருந்து விழும் துளிக்கென காத்திருக்கும் ஒரு பறவையைக் கண்டேன்.

 இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சை சென்றபோது ஒரு அபூர்வமான சிற்பத்தை  கண்டேன். இடம், பெரிய கோயிலில் அம்மன் சன்னதி.

  ஊருக்கு திரும்பி வந்து தேடிய போது வலைத்தளம் எதிலும் அச்சிற்பத்தைப் பற்றிய குறிப்பு  கிடைக்கவில்லை. தமிழ் சங்க இலக்கியங்களில்  அப்படி ஒரு காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறதா என்றும் தேடினேன், அதிலும் தோல்வி. தமிழறிஞர்களுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்புண்டு.  அந்த சிற்பத்தை புகைப்படம் எடுத்து அதை சித்திரமாக வரைந்ததைத்தான் கீழே காண்கிறீர்கள்.


 ஒரு  அசாதாரண நிகழ்ச்சியை கண்டு சிற்பி இதை வடிக்க முயன்றாரா அல்லது ஒரு கவிஞனின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் வகையில் வடித்தாரா என்பது கேள்விக்குரியதாகிறது.  

அதற்கானக் கவிதையை யாராவது எடுத்துக் கொடுக்கும் வரையில் எனக்குத் தோன்றிய வகையில் நான் ஒரு கவிதை எழுதி வைக்கிறேன்.

புள்ளுக்கு கூந்தல் வடி நீரும் குடிநீராமோ

உளிவடித்த சிலையும் உயிர்த்து வருமோ

வெளிவரும் ஆயிரம் ஆண்டுகள் சரிதம்

      களித்துப் போற்றவே,  தமிழரின்  பெருமை

                                                               ( புள் = பறவை )

குருவி நீர் குடிப்பது என் வரைப்புத்தகத்தில் பென்சில் கலரால் வரையப்பட்டது.

மங்கை கூந்தலை உலர வைப்பது டிஜிடல் முறையில் வரையப்பட்டது

Wednesday, June 12, 2024

லாந்தருக்கு 'லாந்தர் கவிதை'

 ஆங்கிலத்தில் Lantern என்பது தமிழில் லாந்தர் ஆகிவிட்டது.  அதை அரிக்கேன் விளக்கு என்றும் சொல்வதுண்டு.

அது என்ன லாந்தர் கவிதை ?

 Lantern Poem  என்று வகைப்படுத்தப்பட்டுள்ள கவிதைகள் ஜப்பானிய லாந்தர் விளக்கின் அமைப்பை ஒத்து இருக்கும்.  மூன்று வரி ஹைகூ கவிதைகள் போல இவைகள் ஐந்து வரிகள் கொண்டவையாக இருக்கவேண்டும்.  முதல் வரியில் ஒரு மாத்திரை ( syllable) அளவில் துவங்கி அடுத்தடுத்த வரிகளில் ஒவ்வொன்றாகக் கூட்டி மீண்டும் ஐந்தாவது வரியில் ஒரு மாத்திரையில் முடியும்.  உதாரணத்திற்கு ஒரு கவிதை.  

Fruit

Are yum

Are tasty

And healthy for

you

(மூன்றாம் வரியில்  tasty    மற்றும்  நான்காம் வரியில்  healthy  இரண்டும் இரண்டு மாத்திரைகள் எனக் கொள்வதால் விதி சரிபட்டு வருகிறது.)

இது என்ன புதுசா ஆங்கில பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டே என்று வாசகர் நினைப்பது புரிகிறது.

நான் புதிதாக வாங்கிய சாம்சங்க் வரைபட டாப்லெட்டில் வரைந்த  லாந்தர் விளக்குக்காக எதையோ தேடப்போய் மேற்கொண்ட புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அதை உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.  

 இந்த லாந்தர் விளக்கு  சாம்சங் -கில் கொடுக்கப்பட்டிருக்கும் மென்பொருளைக் கொண்டே வரையப்பட்டது. வேறெந்த விசேஷ மென்பொருளும் உபயோகிக்கவில்லை. 

இரவில் வழித்துணைக்கு பயன்பட்ட இந்த லாந்தர் விளக்குகள்  சந்தையிலிருந்து திரும்பும் மாட்டு வண்டிகளின் அடிப்பக்கத்தில் மாட்டப்பட்டு,  வண்டியின் போக்கிற்கு ஏற்ப அசைந்தாடும் அழகை கண்டு ரசித்திருக்கிறேன். அவைகள் வண்டி மாடுகளுக்கு போதிய வெளிச்சம் கொடுத்தனவோ இல்லையோ,  பின்னால் வரும் வேறு வாகனங்களுக்கு எச்சரிக்கையாக செயல்பட்டன. இப்பொழுதும் கிராம பக்கங்களில் ஓரளவு பயன்பாட்டில் இருக்கக் கூடும்.  விரைவிலேயே இவைகளின் சகாப்தம் காட்சிப் பொருளகங்களில் முடிவடையும்.

அடேயப்பா இந்த சின்ன விளக்கில் எவ்வளவு நுணுக்கமான பொறியியல் விஷயங்கள்!!  காற்று உள்ளே போவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள், காற்றில் அணையாமல் காப்பதற்கு ஒரு கண்ணாடி புட்டி, அது அசையாமல் இருக்க  சுற்றி இறுகப் பிடிக்கும் கம்பிகளின் அமைப்பு, கூடவே  ஒரு கொக்கியின் பாதுகாப்பு  என்று வியக்க வைக்கிறது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பயன்பட்டிருக்கும் இந்த விளக்குகளைக் கேட்டால் எவ்வளவு சரித்திரம் கிடைக்கும்.

லாந்தர் விளக்குக்கு ஒரு லாந்தர் கவிதை :

நீ

கண்ட வரலாறு

எல்லாம் அடங்குமோ இந்த

லாந்தர் கவிதையின் உள்ளே,  சொல்லிடு

அரிக்கேனே !

( இதில் மாத்திரை கணக்குப் பார்க்காமல் சொற்களின் கணக்குப்படி  அமைத்துள்ளேன்.)