Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, August 2, 2018

அக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர்

அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக  கண்ணைக் கவரும் வகையில்  மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும்.

ஆனால் இதில் வர்ணம் பூச சற்று பொறுமையும்  திட்டமிடுதலும் அவசியம்.

ஏனப்படி என்றால் ஆயில் வர்ணம் போலல்லாது மிக வேகமாக உலர்ந்து விடும் தன்மை உடையது. ஒருமுறை உலர்ந்து போனால் அது மீண்டும் நீரில் கரையாது. இதனால்  அடுக்கு முறையில் வர்ணம் ( Layering technique) பூச முயலும் போது பூசப்பட்ட வர்ணம் புது வர்ணத்தோடு குழைந்து ஒன்றாக இணையாது. தனித்தனியாகத் தெரியும்.

எதனாலோ இது எனக்கு சுகப்பட்டு வரவில்லை. என் திட்டமிடும் தன்மை மிக மிக பலஹீனமானதாக இருக்கலாம். எப்படியோ கஷ்டப்பட்டு  என் முதல் முயற்சியாக ஆரம்பித்த இரண்டு சிங்கங்களின் ஓவியத்தை  முடித்தேன்.

இதன் பின்னர் அந்த  அக்ரிலிக் டப்பாவை மூடி வைத்ததுதான், ஒன்றரை வருடம் அதை திரும்பிப் பார்க்கவில்லை.

ஆனால் வேளை வந்தால் யார் காலை வேண்டுமானாலும் பிடிக்க வேண்டி வரலாம் !
( நான் கர்நாடகா அரசியல் நிலவரம் பற்றிச் சொல்லவில்லை :)))

என்னுடைய  மொபைல் ஃபோன் மேலுறையின் மேலிருந்த மெல்லிய தாள் பூச்சு சிறிது சிறிதாய் உரிந்து போய் பார்ப்பதற்கு அகோரமாய் எல்லோரிடமும் எனக்கு திட்டு வாங்கித்தந்தது. புதிதாக ஒன்றை வாங்கிக்கொள்ளலாம் என்று கடை கடையாய் ஏறி இறங்கினேன் ( பிறத்தியாரை திருப்தி படுத்தத்தான்!) எங்கும் என்னுடைய மாடலுக்கு இல்லை என்றே பதில் வந்தது.

அந்த மேலுறை இன்னமும் திடமாகத்தான் இருக்கிறது. அதனால் அதை தூக்கிப்போடவும் மனம் வரவில்லை. அதன் மேல் ஏதேனும் Vinyl Sticker படம் ஒன்றை ஒட்டி விடலாம் என்று பார்த்தால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போது தான் நினைவுக்கு வந்தது அக்ரிலிக் கலர் டப்பா !!

வேகமாக உலரும், உலர்ந்தபின் ஒட்டாது, கரையாது; பார்ப்பதற்கும் பளிச் என்றிருக்கும். இது தானே வேண்டும். தேடி எடுத்தேன் அந்த டப்பாவை.

வர்ணங்கள் யாவும் சற்றே காய்ந்து சீக்கிரத்திலேயே பயனிழந்து விடும் நிலை அடைந்திருந்தது. பச்சை வெள்ளை இரண்டையும் கலந்து உடனே இரண்டு பக்கங்களுக்கும் பூசினேன். பின்பக்கத்தை சற்று அடர் பச்சையாகவும் முன்பக்கத்தில் வெளிர் பச்சையாகவும் தயார் செய்து  அதன் மேல்  ஒரு சிரிக்கும் புத்தனை  மார்க்கர் பேனாவால் வரைந்து விட்டேன்.


Laughing Buddha  அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அள்ளித் தருபவராம்.  தாமரை பூ, செல்வம், பெரிய காது, தொப்பை,  கையில் ஜெபமாலை, ஆனந்த நிலை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது நம்முடைய விநாயகரை அவர்கள் நாட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. சில படங்களில் அவர் கைக்கு ஒரு குடையை கொடுத்து ஒரு காலை தூக்கியவண்ணம் வரைந்திருப்பது வாமன அவதாரத்தை நினைவூட்டுகிறது.

எப்படியோ தூக்கிபோட இருந்த மேலுறைக்கு இன்னமும் சிறிது நாள் ஆயுள் அக்ரிலிக் வர்ணத்தால் கிடைத்திருக்கிறது.


1 comment:

உமா said...

மிக்க நன்று