Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, December 17, 2017

ஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.


சில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ படம் ’வாட்ஸ்-ஆப்’ ல் வலம் வந்து கொண்டிருந்தது.

அது என்ன ஆச்சரியம்?

 பல டன்கள் எடையுள்ள பெரும் பாறைகளை எப்படி கடைந்து வேலைப்பாடுடைய தூண்களாக மாற்றியுள்ளார்கள் , அதுவும் 900 வருடங்களுக்கு முன்பு? அதற்கான இயந்திரங்கள் இருந்தனவா? அந்த தொழில் நுட்பம் (machining technology) பற்றிய தகவல்கள் எதுவும் இல்லையே ஏன்? இப்படி பல கேள்விகளை முன் வைக்கும் வீடியோ விற்கு இங்கே சுட்டவும்.



மரத்தில் கட்டில் நாற்காலி போன்றவற்றிற்கு சிறிய கடைசல்-பொறி சட்டத்தில் மரத் துண்டைப் பொருத்தி, சுழல விட்டு கூரிய உளி நுனியால் சிறிது சிறிதாக சீவி எடுத்து வேலைப்பாடு மிக்க கால்களை தயாரிக்கும் திறமை காலங்காலமாக தெரிந்து வந்திருக்கிறது. இதை தற்காலத்தில் லேத் எந்திரங்களில் துல்லியமாகச் செய்யலாம்.

ஆனால் பல டன் எடையுள்ள பத்து பன்னிரண்டு அடிக்கும் உயரமான பெரும் பாறாங்கல்லை சுழற்றுவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இதைப்பற்றியே இரண்டு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒன்று தோன்றியது. கல்லை ஏன் சுழற்ற வேண்டும்? அதற்கு பதிலாக அந்த கல்-உளியை சுற்றி வரத் தேய்த்தால் ? உடனே நினைவிற்கு வந்தது செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் முறைதான். அதனை சற்றே மாற்றி அமைத்தால் பெரும் கல்லையும் கடைந்து தூண்கள் செய்யலாம். கீழே உள்ள படம் அந்த முறையை கோடிட்டு காட்டுகிறது.


( Click on the figure to view larger picture)

 கல்லைத் தாங்கும் மேடை  ( pedastal) பெரிய மரத்தின் அடிப்பாகமாக இருக்கலாம் அல்லது இன்னொரு செம்மை படுத்தப்பட்டகல்லாகவும் இருக்கலாம். சுற்றிவரும் மரச்சட்டம் அதன் உரல் போன்ற சிறுத்த இடைப்பகுதியில் சுழற்சிக்கு ஏதுவாக தளர்வாக வில் போன்ற அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும். எண்ணெய் செக்குகளின் படத்தைப் பார்த்தால் புரியும்.

 கல்லுளியைக் கொண்டு சுற்றிச் சுற்றி தேய்க்க வேண்டுமானால் அதற்கு ஏதேனும் சக்தி வாய்ந்த காளை, குதிரை யானை போன்ற மிருகங்களால்தான் முடியும். மேலும் அவ்வளவு பெரிய கற்களை இடம் விட்டு இடம் நகர்த்தவும், தூண்களைத் தூக்கி நிறுத்தவும் யானைகள் கண்டிப்பாக பயன்பட்டிருக்கும். சோழர்கள் காலத்தில் யானையைக் கட்டி போரடித்ததாக (நெற்கதிர் பிரித்தல் ) வழக்குண்டு. அதனால் தான் கல்லை சுரண்டி எடுக்கும் வேலைக்கும் யானையை மிருகங்களின் பிரதிநிதியாக வரைந்தேன்.

 இந்த விளக்கப்படம் Paint-3D ல் வரையப்பட்டது.

 கல்லைத் தேய்ப்பது அவ்வளவு சுலபமா? இதற்கு விடை ஏற்கனவே என் பேலூர் சிற்பங்கள் பதிவில்  சொல்லியிருக்கிறேன்(Click the 'Label' word below the article). Soap stone எனப்படும் இவைகளை கூரிய நுனியால் எப்படி வேண்டுமானாலும் செதுக்கலாம். நம் காலத்தில் ஆரம்பப் பள்ளியில் பயன் படுத்திய சிலேட் பலகையும் இந்த வகையை சேர்ந்து தான்.

 சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சும்மா கிடந்த சிலேட்டுப் பலகையில் நான் செதுக்கிய சிற்பத்தைத் தான் கீழே பார்க்கிறீர்கள். வீட்டில் கிடந்த சிலேட்டை ஒரு கலைப் பொருளாக மாற்றுவதற்கு பயன்பட்டது ஒரு screw driver. அந்த மயில் படம், அந்த காலத்து இன்லேண்ட் லெட்டரில் காணப்பட்ட தபால் தலை சித்திரமாகும்.




எப்படியோ ஹொய்சளர்கள் புதிர் ஒன்றை விடுவித்தாயிற்று.  இதற்காக யாரும் பரிசுத் தரப் போவதில்லை என்பது வேறு விஷயம். வாசகர்களின் பாராட்டுகளே பெரிய பரிசு :)) 

No comments: