Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, June 27, 2009

செய்யும் தொழிலே தெய்வம்

இவர் தன் திரை அனுபவங்களை வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதி வந்த பொழுது படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

எல்லோரையும் விட படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடும் இவருக்கு ஒருமுறை கூட நடிகர் சிவகுமாரை முந்திக் கொண்டு வர முடியவில்லை. எப்பவுமே அவர்தான் முந்தி.

ஒருமுறை எப்படியாவது சிவகுமாரைவிட முன்னதாகப் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு (யாருக்கும் அது பற்றி மூச்சு விடாமல்) வழக்கத்தை விட எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு அரைமணி நேரம் முன்னதாகப் படபிடிப்பு தளத்துக்குப் போய் சேர்ந்தார். இவர் எண்ணங்களை டெலிபதியில் தெரிந்து கொண்டாரோ என்னவோ மேக்கப் மேன் நாற்காலியிலிருந்தபடியே வணக்கம் சொல்லி இவரை வரவேற்றார் சிவகுமார்.


வாழ்க்கையில் இவர்கள் பெற்ற வெற்றிகளுக்கு வேறு காரணமே தேவையில்லை.

செய்யும் தொழிலே தெய்வம்.

Tuesday, June 2, 2009

அச்சச்சோ ரெட்டையா !!

ஹாங்காக் நகரத்தில் வசிக்கும் ஒரு ஓவியரைப் பற்றிய ஒரு குறிப்பு ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது.

அவருடைய தனித்தன்மை என்னவென்றால் எந்த ஓவியத்தைக் காட்டினாலும் அதை அச்சு அசலாக மூலத்தைப் போலவே வரைந்து கொடுத்துவிடுவாராம். அதை ஒரு தொழிற்சாலை போலவே உதவி ஆட்கள் வைத்துக் கொண்டு செய்து வருகிறாராம். அவரை போலவே அந்நகரில் மிகப் பலரும் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருவதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அது மிக டென்ஷனான வேலையென்றும் அகில உலக சந்தையில் மூலப்பிரதிகளுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் விலை கிடைப்பதால் நகல் ஓவியங்களை ”புராதனமான ஓவியர்களின் மூலம்” என்று விற்கக் கூடிய கள்ளச் சந்தை உருவாகி இருப்பதால் அதிக சட்டத் தொல்லைகளுண்டு என்றும் குறிப்பி்ட்டிருந்தார்.

நமக்கு அது மிகப் பெரிய விஷயம். சமயங்களில் நாம் வரைந்த சில ஓவியங்களையே யாராவது மீண்டும் வரைந்து கொடுக்கச் சொன்னால் நம்மால் அதே ஈடுபாட்டுடன் திரும்பவும் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. அதைத் தீர்க்க இன்று ஒரு வழியை காண்போம். இது ஏற்கனவே பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது தான்.

சென்ற பதிவில் வ்ரையப்பட்டிருந்த மழலையே இம்முறை வண்ண வடிவில்.

மிக மங்கலாக ஜெராக்ஸ் செய்யப்பட்ட நகல் படத்தில் வெவ்வேறு விதமாக பென்சில் மற்றும் பேஸ்டல் வர்ணம் பூசினேன். சாதாரண பாண்ட் தாளில் எடுக்கப்பட்டத்தால் வர்ணங்கள் பரவுவதில் சற்று வித்தியாசம் இருந்தது. பரீட்சார்த்தமானதாகையால் பரவாயில்லை என்று வர்ணம் பூசுவதை தொடர்ந்தேன்.

வேண்டுமென்றே தலை முடிக்கான வர்ணத்தையும், பூவாலைத் துண்டுகளின் வர்ணத்தையும் மாற்றினேன். விளைவு இரட்டைக் குழந்தைகள். இன்னும் முனைப்பாக செயலாற்றினால் ஒரே மாதிரியான படங்களை இன்னும் நல்ல விதமாக உருவாக்க முடியும் எனத்தோன்றுகிறது.

அதாவது நல்ல நகல்களை உருவாக்க முடியும் :))

யாருக்காவது அன்பளிப்பாக கொடுக்க இயலும்.

நகல் எடுக்கும் பொழுது நல்ல வரைதாளில், எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பார்த்து செய்தால் உங்களுடைய மூலப் பிரதிக்கும் நகலுக்கும் யாராலும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு செய்ய முடியும். ( விரல்களில் இருக்கும் எண்ணெய் பசை தாளில் ஒட்டிக்கொண்டால் பின்னர் அந்த இடங்களில் வர்ணங்களை ஒட்டவிடாமல் செய்யும். அப்போது அவை திட்டுத்திட்டாகத் தெரியும்.)

கொசுறு : ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் மூன்று பிரதிகளை எடுக்கச் சொன்னேன். அந்த பெண் செட்டிங்கை மாற்றி நாலாவது பிரதி எடுக்க முற்பட்டபோது வேண்டாம் தேவையில்லை என்று தடுத்தேன். அவள் புன்னகையுடன் “எனக்கும் ஒரு காப்பி” என்று தனியே எடுத்து வைத்துக் கொண்டாள்.

நல்ல ஓவியத்திற்கு இதைவிட என்ன அங்கீகாரம் வேண்டும் !!


Monday, May 25, 2009

கண்ணால் பேசும் மழலை

குழந்தைகளால் ஈர்க்கப்படாதவர்கள் இருக்க முடியாது.

பிராணிகளின் குட்டிகளாகட்டும், பறவைகளாகட்டும் அவற்றின் கவர்ச்சியே பெரிய்ய்ய்ய்ய கண்கள்தாம். கார்ட்டூன் படங்களிலும் உயிரோட்டம் தருவது பெரிய கண்களை உருட்டி உருட்டிக் காட்டப்படும் பலவிதமான உணர்ச்சிகளே.

பல சிறப்பான வரைபடங்களை பார்க்கும் போது கண்களை வரைவதில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியே தனித்து தெரியும். அப்படி ஒரு வலைப்பூ வை சமீபத்தில் பார்த்த தாக்கம் தான் கீழே காணும் குழந்தையின் படம்.

அவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் தரத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே :(

ஆயினும் நமக்கு படம் வரைவதில் உற்சாகம் குன்றாமல் இருக்கிறதே அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

குழந்தையின் கன்னம் வழ வழ என்று வர வேண்டுமானால் அழுத்தமான கோடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த படம் முழுக்க முழுக்க பென்சிலை சுரண்டி எடுத்த கரிப் பௌடர், இரப்பர் அழிப்பான் மற்றும் விரல்ககளால் விரவுதல் செய்து வரையப்பட்டிருக்கிறது.

கற்றுக்கொண்ட முக்கிய பாடம் என்னவென்றால் மிக மிக மெல்லிய கரி பூச்சு கூட சுற்றி இருக்கும் பகுதிகள் அழிப்பானால் அழிக்கப்படும் பொழுது எடுப்பாகத் தெரிகிறது. அதனால் ஒளியின் மிக குறைந்த அளவு வேறுபாடுகளையும், தோல் சுருக்கங்களையும் வெளிக்கொணர முடிகிறது.

உபயோகப்படுத்தப்பட்ட பென்சில் (நேரடி பயன் பாடு மிகக்குறைவே) 2B.

கூடிய விரைவில் இதையே வர்ணத்தில் செய்ய முயற்சிக்கிறேன்.

எப்பப் பார்த்தாலும் பழைய படங்களையே போட்டு கொண்டிருப்பது என்னமோ போலிருந்தது. அதனால்தான் இம்முறை பிரத்யேகமான புத்தம் புது படம் :))

Saturday, May 9, 2009

இயற்கை வளைவு

செய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது.

இது ஒரு ink & watercolor படம்.

கறுப்பு மையினால் லைன் டிராயிங் முடித்து பின்னர் நீர்வர்ண பென்சில்களால் அங்கங்கே கற்களின் பரிமாணம் தெரியும் வண்ணம் ஆரஞ்சு, மஞ்சள், நீலம், பச்சை வர்ணங்களை தேய்த்தேன்.
கடைசியாக வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று கரைந்து இணையும் வகையில் சிறிது நீரில் தோய்த்த பிரஷ்ஷினால் ஒரு பூச்சு கொடுத்தேன். ஓரிரு தினம் அதை இப்படி அப்படி வைத்து அழகு பார்த்தபின் அது எங்கே போயிற்று என்பது பற்றி நினைவு கூட இல்லாமல் மறந்து போனேன்.

சமீபத்தில் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்த போது திடீரென்று இது கண்ணில் பட்டது.

”எனக்கு உன் வலைப்பூவில் இடம் கிடையாதா” என்று கேட்பது போல் தோன்றியது :))

இந்த வளைவு எங்கே இருக்கிறது எவ்வளவு பெரியது என்ற விவரங்கள் இல்லாமல் எப்படி பிரசுரிப்பது என்று யோசித்தேன்.

தேடுவதில் சில நாட்கள் சென்றது. நான் நினைத்தது போல் ஆப்பிரிக்காவில் இல்லாமல் இது வட அமெரிக்காவில் உள்ள இயற்கை வளைவு ஆகும். உலகத்திலே மிகப்பெரியது எனலாம். 52 அடி உயரம் உடையது. காற்றின் அரிப்பால் இங்குள்ள செம்பாறைகளில் குடைவுகள் உண்டாகி ஏற்பட்டிருக்கும் வளைவு இது.

உடா (Utah) மாகாணத்தில் காணப்படும் 500 க்கும் மேற்பட்ட இயற்கை வளைவுகளில் இது மிகவும் பிரசித்தமானது. இதன் பெயர் Delicate Arch. அங்கே இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட இயற்கை சரகமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு பேணப்படுகிறது.

எப்போதாவது வாய்ப்பு கிடைச்சா போய் பார்க்க ஆசைதான் :))

Monday, April 13, 2009

திகில் படங்களின் நாயகன்

இந்த மனிதரின் கண்களில் தெரிவது என்ன ?

ஆழ்ந்த சிந்தனையா ?

அல்லது எதிரே பேசுகிறவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் நிலையா?

இப்படத்திற்கு ஆதாரமான புகைப்படத்தை பிரசுரித்த பத்திரிக்கைக்கு அந்த சமயம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபடியால் இரண்டாவதே சரி.

கண்களில் தெரிகின்ற நிலைக் குத்தான பார்வையும், அதற்குத் துணை போகும் வகையில் அழுத்தமாக முகவாய்கட்டையை தாங்கும் கைகளும் மற்றும் கன்னத்தை அழுத்தி இருக்கும் விரல்களும் ஒரு நல்ல படத்தை முயற்சித்துப் பார்ப்பதற்கு போதுமான விஷயங்கள் என்று தோன்றியது.

முதலில் படம் முழுவதையும் வர்ண பென்சிலில் வரைந்து கொண்டு பின்னர் வர்ண அழுத்தம் தேவைப்படும் இடங்களில் பேஸ்டல் வர்ணத்தில் பூர்த்தி செய்தேன். அந்த வகையில் இது ஒரு mixed media படம் என்று சொல்லலாம். இதற்கானக் காரணத்தை கபில் தேவ் பற்றிய பதிவில் விளக்கி யுள்ளேன்.



(பிற்சேர்க்கையில் விவரம் அறிக)

சரி யாரிந்த மனிதர் என்று கேட்கிறீர்களா; இவர் பெயர் ராம் கோபால் வர்மா.

ராம்கோபால் வர்மா பற்றிய சிறு குறிப்பு

நிசப்த், ஜபர்தஸ்த், ராத், பூத்,சர்கார் ராஜ் போன்ற திகில் படங்களை ஹிந்தி திரைக்கு கொடுத்தவர்.நாற்பதுக்கும் மேலான ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இயக்குனரும் ஆவார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை வைத்து படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதிகம் அறிந்திராத கலைஞர்களையும் வைத்து படம் எடுப்பவர். ஹிந்தி திரை உலகில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர்.

பின் குறிப்பு:
வரைபடத்தை முறையாக பாதுகாக்காமையால் சில இடங்களில் மடிப்புகளும் சுருக்கங்களும் ஸ்கேனரிலும் விடாமல் ஒட்டிக்கொண்டு வந்துள்ளன. ஆகையால் உங்கள் படங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம் :))


பிற்சேர்க்கை :
வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்தைக்கண்ட பின் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. உடனே என்னோட குறுக்கு மூளை சும்மா இருக்குமா ! எப்படி கஷ்டபடாமல்  வர்ண அழுத்தத்தைக் கூட்டுவது என்று யோசித்தேன். அப்படியே பிக்காஸாவில் படத்தை திறந்து  Auto contrast ஐ கூட்டிப் பார்த்தேன். ஓரளவு திருப்தியாக இருந்தது.  உடனே வலையேற்றி விட்டேன். :)))

நன்றி குமார் !
!

Wednesday, April 1, 2009

தாயும் சேயும் : மகிழ்ச்சிக்கு ஏது தடை ?

இன்று Slide Share என்கிற வலை தளத்திலிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

Hi Kabeeranban,

We've noticed that your slideshow on SlideShare has been getting a LOT of views in the last 24 hours. Great job ... you must be doing something right. ;-)

Why don't you tweet or blog this? Use the hashtag #bestofslideshare so we can track the conversation.

Congratulations,
-SlideShare Team


ஒரே நாளில் வந்த பார்வையாளர்கள் சுமார் 20000. பின்னூட்டம் 0 !! : )))

ஆனால் slide share தளத்தினர் இதை best of slide share வகையில் சேர்க்க விழைந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.

கடந்த நான்கு மாதங்களாக ஆயிரத்துக்கும் குறைவாக பார்வையிடப்பட்ட அந்த விளக்கப்படம் எந்த புண்ணியவான் (களின்) ட்வீட்டர் தயவாலோ என்னவோ ஒரே நாளில் பெருமளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருகிறது.

அந்த விளக்கப் படத்தை ’தாயின் அன்பு’ என்கிற தலைப்பில் கற்கை நன்றே வலைப்பூவில் இடுகையாக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன்.

அந்த விளக்கப்படத்தில் நான் பயன்படுத்தியது என்னுடைய கீழ்கண்ட ஓவியத்தைதான்.


இந்த படத்தை ஹிந்து பத்திரிக்கையில் வந்திருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து வரைந்திருந்தேன்.

முக்காடிட்டிருக்கும் தாயின் துணியில் தெரியும் மடிப்புகளும் தாயும் சேயும் தம்மை மறந்த களங்கமற்ற சிரிப்பும் இதை வரையத் தூண்டியது.

தாயின் அன்பை கற்கை நன்றே வலைப்பூவில் படிக்க இங்கே .

ஸ்லைடு ஷேர் வலைத்தளத்தில் காண இங்கே

Saturday, March 14, 2009

பிஸ்மில்லா கான் - இசை முனி

மார்ச் 21, 1916 ல் பீஹாரில் பிறந்த பிஸ்மில்லா கான், கங்கா மாயி என்று கங்கை கரையை போற்றியபடி தன் வாழ்நாளெல்லாம் காசியிலேயே கழித்தவர். இவரதுமுன்னோர்கள் போஜ்பூர் அரசவை கலைஞர்கள். ஆனால் ஷெனாய் வாத்தியத்தை உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை பிஸ்மில்லா கான் என்ற தனி மனிதனையே சேரும்.

1947-ல் இந்திய சுதந்திரம் இவரது இசையுடனே செங்கோட்டையில் பிறந்தது.

அவர் கால் வைக்காத முக்கிய தலைநகரங்களே உலகில் இல்லை எனலாம்.

இந்தியா அரசாங்கத்தின் மிகப் பெரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பெற்று கௌரவிக்கப் பட்டவர்.

வேண்டிய அளவு செல்வம் சேர்ந்த போதும் தனிப்பட்ட வசதிகளை அவர் பெருக்கிக் கொள்ளவில்லை.

”பக்கத்து வீட்டிலே ரம்ஜான் அலி பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை ஊற்றி சூட்டைத் தணிக்க கஷ்டப்படும் போது எனக்கு ஏ.ஸி அறையில் தூக்கம் எப்படி வரும் ?” என்பாராம்.

காசி நகரத்து தெருக்களிலே சைக்கிள் ரிக்‌ஷாவிலேயே போய்வருவார். இசைக் கச்சேரிகளுக்காக எங்கு சென்றாலும் எளிமையான விருந்தோம்பலையே ஏற்றார். ஐந்து நட்சத்திர விடுதிகளை வெறுத்தார். எந்நேரத்திலும் வீடு தேடி வருபவர்களுக்கு் அவர் வீட்டில் உணவு இருக்கும்.

இவர் ஒரு குழந்தை உள்ளம் படைத்த கலைஞர். பணிவு குணத்திற்கு அவர் யாவருக்கும் எடுத்துக்காட்டு.

1971 -ல் நாட்டின் பெரும் கலைஞர்களைக் கூட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் ஒரு பெரும் இசைவிழா நடத்தியது அரசு. விழாவிற்கு பிறகு அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு பலரும் பாராட்டு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தனர். அவற்றின் இடையில் உருது மொழியில் பணிவான ஒரு வேண்டுகோள் கடிதம்.

”ஐயன்மீர்! வரும் வருடங்களில் இவ்விழாவை வேறு ஏதேனும் அரங்கத்தில் வைத்துக் கொண்டால் சந்தோஷப்படுவேன். ஒவ்வொரு வரிசையிலும் பார்வையாளர்களின் முன் போடப்பட்டிருக்கும் மேஜைகள் கலைஞனுக்கும் இரசிகனுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கிறது”

பிஸ்மில்லாக் கான் அவர்களின் அந்த கடிதத்தை கண்ட பின் விழா காமினி அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.


அவருடைய கண்களில் ஒரு முனிவனின் தவம் தெரியும். அவர் செய்தது இசைத் தவம். அதை ஓவியத்தில் பிடிக்க முயற்சித்தேன். மிகவும் கஷ்டமாய் போனது. காரணத்தை வெகு காலம் யோசித்தேன்.

கழுத்தை திருப்பியிருக்கும் விதமா?

மூக்கு தூக்கியிருக்கிறதா ?

நெற்றிக்கும் தொப்பிக்கும் உள்ள இடைவெளியா ? தாடியா ?

கடைசியாக எனக்குத் தோன்றியது அவருடைய கண்கள். அவருக்கு சற்றே பூனைக் கண்கள். பலமுறை திருத்தி ஓரளவு பூனைக்கண் போல கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.

மிச்சத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.