Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Friday, January 8, 2021

சித்திரமும் மவுஸ் பழக்கம் - 5 :

      வெகு நாட்களுக்குப் பின் இன்னொரு படத்தை கணினி மென்பொருளைக் கொண்டு  வரைய முயற்சி செய்தேன்  -Digital colouring. 

அதன் விளைவே கீழே காணும்  படம். பென்சிலால்  காகிதத்தில் வரைந்து பின்னர் ஒளிவருடி (scanner) மூலம் கணினிக்கு ஏற்றினேன். அதன் பின்னர் வர்ணங்களை மைக்ரோசாஃப்ட்  Paint 3 D மென்பொருள் கொண்டு பூசினேன்.  முழு படத்தையும் பதிவின் கடைசியில் பார்க்கலாம்.  சரி , யார் இவர் ?

 
சென்ற நுற்றாண்டில்  வாழ்ந்து  மக்களிடையே தர்மத்தின் அவசியத்தை போதித்த   மகான் ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளே இவர். 

இவரை தமிழ் நாட்டில் பலருக்கும் தெரியாது. ஸ்ரீ தத்தாத்ரேயரின் வழி அவதூதராகக் கருதப்படும் இவரது வரவு பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாயம் நாற்பத்தியொன்றில் "ஸ்ரீதரன் என்ற மகாயோகியின் சீடர்கள் மூலம்  தன் பிறந்த ஊரான  பிதாபுரத்தில்  ஒரு சமஸ்தானம் எழுப்பப்பட்டு தன் பாதுகைகளை வைத்து பூஜிக்கப்படப்  போவதை   அறுநூறு ஆண்டுகளுக்கு  முன்பே ஸ்ரீபாத வல்லபர் சொல்லி வைத்திருக்கும் செய்தியை படிக்கலாம்..

   அவர் சொல்லியபடியே மஹான் ஸ்ரீதரின் சீடரான சஜ்ஜனகடா ஸ்ரீராமஸ்வாமியின் பெரு முயற்சியால் பிதாபுரத்தில் ஸ்ரீபாத வல்லபரின் சமஸ்தானம் 1960 களில் எழுப்பப்பட்டு  வெகு விமரிசையாக  இப்போது ஸ்ரீ தத்த ஆராதனை நடைபெற்று வருகிறது.  கீழே உள்ள காணொளியில் ஸ்ரீ ராமஸ்வாமி தன் குருவிற்கு குரு பூர்ணிமையன்று செய்யும் பூஜையை காணலாம். 


ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகள் கர்நாடகாவில் குல்பர்கா அருகே சின்சோலி என்ற கிராமத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி 1908 வருடம் அவதரித்தார்.

    ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா இவரைப் பற்றி சிஷ்யர்களிடம் குறிப்பிடும் போது “நான் மிகவும் கால்நடையாகவே  நாடெங்கும் சுற்றியிருக்கிறேன். ஸ்ரீதர சுவாமிகளைப் போல தேஜஸ்வியும் தபஸ்வியும் கண்டதில்லை. அவர் இயல்பிலேயே அகண்ட பிரம்ம நிஷ்டையில் உள்ள பூரண ஞானி.” என்று சொல்லியிருக்கிறார்.

     மா ஆனந்த மயி ஸ்ரீதர சுவாமிகளை சந்தித்தப்பின் “பரமார்த்தம் என்னும் சிகரத்தை அடைய மிக குறுகிய கஷ்டமான மலைப்பாதையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.ஸ்ரீதர சுவாமிகளோ ஏற்கனவே அதன் உச்சியை அடைந்து நிலைப்பெற்று விட்டவர்” என்பதாக அவருடைய அனுபவத்தைக் கூறியிருக்கிறார். 

 மகரிஷி இரமணர் காலமான பிறகு அவருடைய அணுக்கத் தொண்டரான பிரபாவதி ராஜே ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளை தரிசித்து ஆசிர்வாதம் பெற்ற பின் “ சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீ இரமணரையே உணர்ந்தேன்” என்றார். 

   1958 December  4 தேதி  சென்னை வந்திருந்தபோது தாம்பரத்திற்கு அருகே ஒரு பள்ளியில் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி (பெரியவா என்று அன்புடன் அழைக்கப்படும் பரமாச்சாரியார்) அவர்களை ஸ்ரீதரர் சந்தித்து அளவளாவினார். அவருடைய உரையின் மையக்கருத்தை பரமாச்சாரியரே தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக விளக்கியபின் “நரன் நாராயணன் ஆக முடியும் என்பதற்கு ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளே ஒரு ஆதர்சமாகும்” என்று அவரின் தவ வலிமையைப் போற்றினார்.

     சமர்த்த ராமதாசரே தருமத்தை நிலைநாட்ட மீண்டும் அவதரித்துள்ளார் என்று பலரும் நம்பினர். அவர் பல ஆண்டுகள் வெளி உலக தொடர்பு இன்றி தனிமையில் தவமியற்றினார். 

   ஷிவமொக்கா அருகே வரதாபுரம் என்கிற அவருடைய ஆசிரமத்தை, ஸ்ரீ சத்யசாயி பாபா அவருடைய குழாத்துடன் அடைந்தபோது யாவரையும் நிசப்தத்துடன் இருக்கும்படி கூறி அங்கே தவமியற்றுபவர் சாட்சாத் பிரம்மாவே என்றுரைத்தார். ஸ்ரீதர சுவாமிகளும் சிறிது நேரம் வெளியே வந்து யாவரையும் ஆசீர்வதித்தார். 

 1927-ல் ராமநாமத்திலும், சுவாமி சமர்த்த ராமதாசரின் தாசபோதத்திலும் ஈடுபாட்டுடன் மேற்கொண்ட தவ வாழ்க்கை பெரும்பாலும் ராமதாசரின் சமாதியுள்ள ஸஜ்ஜனகடாவிலும் பின்னர் வரதாபுரத்திலும் கழிந்தது. 

ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சனாதன தருமத்திற்கு புத்துயிர் கொடுத்தார். கடைசி எட்டு ஆண்டுகள் தனிமையில் வரதாபுரத்தில் தவம் செய்து 19-4-1973 அன்று மஹாசமாதி அடைந்தார். 

 அவர் பன்மொழி புலமைபெற்றவர். வடமொழி,கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு என எல்லா மொழியிலும் பேசி எழுதும் திறமை பெற்றிருந்தார். வடமொழி, மராத்தி கன்னடத்தில் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்.  அவரைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு  இங்கே  சுட்டவும் .

                                                 (பெரிதாக்கிப் பார்க்க படத்தை சுட்டவும்)

Sunday, September 20, 2020

ஹயக்ரீவரும் குதிரை வீரனும்

    பேஸ்டல் வர்ணங்களை பழக ஆரம்பித்த காலத்தில் -சுமார் இருபது வருடங்களுக்கு முன் -பத்திரிகை ஒன்றில் வெளியான பரிசு பெற்ற புகைப்படத்தைப் பார்த்து ஒரு படம் வரைந்தேன். அதில் குதிரை வீரனின் முகம் தெரியாது அவனுடைய தலைக் கவசமும் இரண்டு கைகளும் மட்டும் தெரியும். ஏதோ குதிரையே ஹெல்மெட் மாட்டிக்கொண்ட மாதிரி ஒரு வினோதமான தோற்றம்.


   எனக்கு அப்படியே குதிரை முகம் உடைய பெருமாளான ஹயக்ரீவரே வருவது போலத் தோன்றியது. அதை ஒரு ஆரஞ்சு வர்ண ஹேண்டுமேட் காகிதத்தில் வரைந்துப் பார்த்தேன். சுமாராக வந்தது. பயிற்சிக்காகத்தானே! அதனால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மறந்தும் போனேன்.

சமீபத்தில் வேறு எதையோ தேடும்போது இந்த ஹயக்ரீவர் எதிரே வந்தார். அதையொட்டி ஹயக்ரீவ உபாசகரான பாண்டிச்சேரி டாக்டர் D  A ஜோசப்-பும்  நினைவுக்கு வந்தார். இன்று வைணவத்தில் மிக அருமையான விளக்கங்கங்களும் சொற்பொழிவுகளும் அடங்கிய அவருடைய இணையதளம்  ஆன்மீக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளது. அவருடைய முகப்புப் பக்கத்திலேயே லக்ஷ்மி ஹயக்ரீவர் விக்கிரகத்தை பதிந்திருக்கிறார்.

    ஹயக்ரீவர் வேதங்களை மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்களிடமிருந்து மீட்டுத் தந்தவர். சரஸ்வதி தேவி இவரை ஆராதித்தே வித்யைக்கு அதிபதியானாள் என்றும் புராணங்கள் சொல்லுகின்றன.  அவரைப் ஆராதித்த பெரும்பக்தர் வாதிராஜர். நாராயணன் குதிரை வடிவில் வந்து அவர் சமர்ப்பித்த நைவேத்தியத்தை தினமும் ஏற்று வந்த கதையை இவ்வலைப்பக்கத்தில் காணலாம்.

   இப்போது இன்னொரு குதிரை வீரனைப் பார்ப்போம். இது என் அம்மாவின் கைவண்ணத்தில்  உருவான குதிரை வீரன். இச்சிறுவனின்  வயது ஐம்பதுக்கும் மேலே!!!  எங்கள் தாயாருக்கு எப்போதும் புது முயற்சிகளில் அதிக ஆர்வம். இப்போதும் உண்டு. யூடியுப் பில் வரும் புது சமையல் குறிப்புகளை அலசி ஆராய்ந்து விடுவார். அப்போது புதிய தையல் மிஷின் வாங்கிய காலம். ஆர்வமும் நேரமும் இருந்தது. பல நாட்கள் நாங்கள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது தலையணை மேஜை விரிப்பு அல்லது என சகோதரியின் சட்டை பாவாடையில் பூக்கள் என எதையேனும் எம்பிராய்டரி  செய்து கொண்டிருப்பார். இப்போதும் அந்த தையல் எந்திரம் இருக்கிறது, ஆனால் பயன்படுத்துபவர் இல்லை.


    விளிம்புகளில் மடிப்பு வைத்து நீள் வட்ட வடிவத்தில் மிகவும் நேர்த்தியாக படைக்கப்பட்ட ஒரு மேஜை விரிப்பின்  நடுவில் அலங்கரிப்பவன் தான் அந்த குதிரைவீரன். இதை அவருக்கு ஒரு சர்பிரைசாக இருக்கட்டும் என்று வலையேற்றுகிறேன்.

  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்  தன்னுடைய படைப்பு இணையம் என்ற அமைப்பின் மூலம் உலகை வலம் வரும் என்று அவரால் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.  அல்லது போன வருடம் கொரானாவைத்தான் நாம் யாராவது  எதிர்பார்த்தோமா?

ஹயக்ரீவனுக்கே வெளிச்சம்.    

Monday, June 22, 2020

சாப்பிட மட்டும் இல்லை தட்டு....

    சென்ற வருடம் டெலாவேரில்  என மகள் வீட்டிற்கு சென்றிருந்த போது ஒரு ஓவியக் கண்காட்சிக்குப் போனேன். ஓவியர்கள் அனைவரும் பொழுது போக்குக்காக வரைபவர்கள். அவர்களுக்கென்று சிறிய அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் இக்கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். பெரும்பாலோனோர் மூத்த குடிமக்களே,அதிலும் பெண்கள் அதிகம்.  ஆயில் அல்லது அக்ரிலிக் வர்ண உபயோகமே அதிகம் காணப்பட்டது.


Saturday, March 21, 2020

தென்னாட்டுடைய சிவனே போற்றி

     இன்று (21/03/2020) சனிபிரதோஷமாயிற்றே சிவ தரிசனம் மிக விசேஷம் என்று அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்றால் கொரோனா வைரஸ் காரணமாக 31 மார்ச் வரையிலும் பொது ஜன தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு பலகை சொல்லியது.

 சிவத் தியானம் செய்வது சிறப்பு என்பதால் சிவனைப் பற்றிய பதிவு ஏதாவது போடலாமே என்று தோன்றியது. உடனே  நினைவுக்கு வந்தது சென்ற வருடம் வரைந்த சிவபெருமானின் நடனங்களில் ஒரு விக்கிரக வடிவம். இந்த விக்கிரகத்தை, என் மைத்துனர் வீட்டில் எதிரில் வைத்துக் கொண்டு வரைந்தேன்.

           சித்திரத்தை பின்னர் ஒளிவருடி (scan) செய்து மடிக் கணினிக்கு ஏற்றி அதன் பின் வர்ணம் பூசினேன். அதற்கு பயன் படுத்திய மென் பொருள் Paint 3 D. இது விண்டோஸ் 10 -ல் கிடைக்கிறது

இது எந்த நடனம் என்பதை தேடித் தேடி ஒரு முடிவுக்கும் வராமலே வலையேற்றுகிறேன். நான் ஊர்த்தவ தாண்டவம் என நினைத்தேன். ஆனால் பெரும்பாலான சித்திரங்களில் அவர் காலை முன்பக்கத்திலேயே ஊர்த்தவ முகமாக தூக்கியிருக்கிறார். யாரோ சிலை செய்பவர் வலைப்பக்கத்தில் இது ஆனந்த தாண்டவம் என்றிருந்தது. நமக்கு பழக்கமான சிதம்பரத்து நடராஜனின் ஆட்டமும் ஆனந்த தாண்டவம் என்று சொல்லப்படுகிறது.



                              ( படத்தை சொடுக்கினால் பெரியதாகத் தெரியும்)
எதுவானால் என்ன?  அவருடைய ஆட்டம் அண்ட சராசரங்களை ஆட்டுவிக்கிறது.  ஒவ்வொரு அணுவிலும் உள்ள ஆட்டமும்  அவனது ஆட்டமே என்பதை இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அவருடைய கூத்தை  நேரிலே காணும் பாக்கியம் பெற்ற திருமூலரின்  வரிகளை நினைவில் கொணர்ந்து அவன் அருளை வேண்டி கொரோனாவிலிருந்து அனைவருக்கும் விடுதலை வேண்டுவோம்.


வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட
கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாடப்
பூதங்களாடப் புவனம் முழுதாட
நாதன் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே

காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே  ஆடி
நீடிடைய நீர் தீக் கால்  நீள் வானிடை ஆடி
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே

அணுவில் அணுவினை ஆதிபிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு 
அணுவில் அணுவினை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவினை அணுகலும் ஆகும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
                                                                
                                                               திருச்சிற்றம்பலம் 


Tuesday, July 2, 2019

மேபிள் சருக்கரை சுவைத்துள்ளீர்களா?

இந்த பதிவில் இரண்டு விஷயங்களைப் பார்ப்போம். ஒன்று வலைப்பூவிற்கு சம்பந்த்தப்பட்ட சித்திரம். இரண்டாவது சித்திரத்திற்கு காரணமான பொருள்.

புதிதாக ஒரு கணினி வரைபட தகடு (graphic tablet) ஒன்றை வாங்கினேன்.  அதைப்பற்றிய சற்று விவரம் :

கணினியின் உதவியுடன் நான் பலநாட்களாக வரைபடங்களுக்கு வர்ணம் பூசி வந்தாலும் நேரடியாக படம் வரைவதில் அதிகம் வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணம்  காகிதத்தில் வரையும் போது பென்சிலில் கிடைக்கும் விரல்களின் வீச்சு (strokes) கணினியில் இல்லாமல் போனதால் தான். இது எனக்கு மட்டுமில்லை, உலகில் உள்ள ஓவியர்கள் அனைவரின் மனக்குறையாகவும் இருந்து வந்தது.

இந்த குறையை போக்குவதற்காக வந்ததே வரைபடத் தகடு.   இதில் நாம் Stylus  அல்லது எழுத்தாணி [இங்கே வரையாணி ]  கொண்டு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு தகட்டில் படம் வரையும் போது கணினியின் திரையில் படம் தெரிகிறது.  ஆனால் தகட்டில் ஏதும் இருக்காது !




நாம் தரும் அழுத்தத்திற்கு ஏற்ப கோடுகளின் பரிமாணமும் வர்ண அழுத்தமும் மாறுபட்டு தூரிகைளைக் கொண்டு வரையும் அனுபவத்தை தருகிறது. பல யூ டியூப் காணொளிகளில் அவற்றைக் காணலாம். இதற்கு பல வித மென்பொருட்களில் பயிற்சி வேண்டும்.  வரைப்படத்தகட்டின் வேலை வெறும் காகிதத்தையும் பென்சில் அல்லது தூரிகைகளின் இடத்தை நிரப்புவதுவே. 

நான் இதைப் பற்றி சிந்தித்ததற்குக்  காரணம் முக்கியமாக
1.எந்த அளவில் (Canvas size) வேண்டுமானாலும் படம் வரையலாம். அதற்கு வர்ணங்கள் வாங்காமலே வர்ணம் பூசலாம். 
2. பென்சில், சார்கோல், நீர்வர்ணம், ஆயில் வர்ணம், பேஸ்டல், அக்ரிலிக் என பலவகையான வர்ண முறைகளையும் முயன்று பார்க்கலாம்.
3. எத்தனை நாட்களுக்குப் பிறகும் சித்திரங்களை சரிசெய்யலாம். 
4..படத்தை வரைந்து முடித்த பிறகு அதை பாதுகாத்து வைப்பதற்கு (இடம் தேடி) சிரமப்பட வேண்டாம். 
5.எப்பொழுது வேண்டுமானாலும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கணினியிலிருந்து பிரிண்ட் செய்து கொள்ளலாம். அல்லது 
6 சட்டம் போட்டு சுவரில் மாட்டாமல் Slide Show ஆக நம் வீட்டு தொலைக்காட்சி திரையில் பிறருக்குக் காட்டலாம்.  சிறிய படமாயினும் திரையில் பெரிதாகத் தெரியும் !

     இப்படியாக, இதையும் சற்று பயின்றால் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம்  சில நாட்களாகவே  மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  Wacom, Huion  என்கிற இரண்டு நிறுவனங்கள் இதில் பலத்த முன்னேற்றம் கண்டுள்ளன. இதில் Huion 610 என்னும்  தகடு சற்றே மலிவான விலையில் கிடைத்ததால் ($ 60) உடனே ஒன்றை வாங்கிவிட்டேன். இதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன் சுமார் ரூ.6500 க்கும் அதிகமாக இருந்தது.

அதில் வரையப்பட்ட முதல் பயிற்சிப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. இது கணினியிலே ஆரம்பிக்கப்பட்டு கணினியிலேயே முடிக்கப்பட்ட சித்திரம். 

    இதில் வரையப்பட்டுள்ள மரம் மேபிள் ( Maple).   மேபிள் மரம் குளிர் அதிகமாக நிலவும்  கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற  பூமியின் வட பாதியிலும் ஆஸ்திரேலியா போன்ற தென் பாதியிலும் அதிகமாக காணப்படுகிறது.  இது அப்பகுதிகளில் வசந்த காலத்தில் தளிர்விட்டு கோடையில் முழுவதும் பச்சையாக காட்சியளிக்கும். பின்னர் பருவமாற்றங்களுக்கு ஏற்ப இலைகள் பழுத்து மஞ்சள் ஆரஞ்சு பின்னர் சிவப்பு வர்ணத்திற்கு மாறி  பனி பொழியும் போது இலைகளை உதிர்த்து விடும். 


    சாலைகளில் இருபுறமும் இவைகள் காட்டும் வர்ணஜாலம் ஓவியர்களுக்கும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் கண்ணுக்கு விருந்தாகும். 10 மீ உயரத்திலிருந்து 30 மீ உயரம் வரை வளரும் இம்மரங்கள் இதற்காக எடுத்துக் கொள்ளும் காலம் 25லிருந்து 30 வருடங்கள் வரை ஆகும்.

   பனைமரத்தில் நுங்கு பிஞ்சை கீறி  பதநீரை வடித்தெடுப்பதைப் போல
மேபிள் சருக்கரை என்பது அதன் காய்கள் மூலம் பிரித்தெடுப்பது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு.

    மேபிள் அடிமரத்தை  துளையிட்டால் அதிலிருந்து இனிப்பான நீர் வடிகிறது. அது 2% சருக்கரை அளவு கொண்டது. அதாவது இதற்காக மரம் ஏறி இறங்க வேண்டியதில்லை.
   இதை நன்றாகக் காய்ச்சி பாகு வடிவில் விற்பதை ஒரு முக்கியத் தொழிலாக பலர் இந்நாடுகளில் செய்து வருகின்றனர். ஏறக் குறைய நம் நாட்டில் ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பாலை வடித்தெடுப்பது போலத்தான் இது.

மேபிள் மரம் நல்ல மரச்சாதனங்கள்,  இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.  கனடா தேசத்தின் கொடியில் இம்மரத்தின் இலையை பொறித்துள்ளனர். அந்நாட்டின் உயர்ந்த ராணுவபதக்கங்களிலும் இதன் இலச்சினை உள்ளதென்றால் இம்மரத்தை எவ்வளவு உயர்வாகப் போற்றுகின்றனர் என்பதை அறியலாம்.
.
இந்த மரம் இந்தியாவில் இருப்பதாக தகவல் இல்லை.

Thursday, May 16, 2019

மாயப்புள்ளி மறையுமிடம் எது?

Spot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘நேரடி வரைவு (அ) வரைதல்” என்பது பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் அதில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களுக்கு பஞ்சமில்லை. சில்பி போன்ற பெரும் ஓவிய விற்பன்னர்கள் தமிழகத்தில் எல்லா ஆலயங்களுக்கும் சென்று அற்புதமான ஓவிய களஞ்சியங்களை வழங்கியுள்ளனர்.

புகைப்படக்கருவிகள் முன்னேற்றமில்லாத காலத்தில் - ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பு - அவர்களுடைய உழைப்பினால்தான் வெளிச்சமில்லாத கோவில் உட்பிராகரங்களின் சிற்ப அழகும் தூண்கள் தாங்கியிருக்கும் அழகிய விதானங்களின் சிறப்பும் பத்திரிக்கை வாசகர்களுக்கு தெரிய வந்தது.

அதை முயற்சி செய்து பார்ப்போம் என்று  சமீபத்தில் வரைந்தது தான் கீழே உள்ள படங்கள்.


அமெரிக்காவின்  ஃபினிக்ஸ் நகரில் உள்ள பெரும் கள்ளிகள் 300 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. மண் வளம் குறைந்த இந்த பாலைப் பகுதியில் முட்புதர்களும் இவ்வகை கள்ளிகளுமே வறட்சியைத் தாக்குப் பிடித்து இந்நிலத்தை சற்று பசுமையாக வைத்திருக்க உதவுகின்றன. அதனால் இங்கு வீடு கட்டி குடியேற வருபவர்களும் அவைகளை பாதுகாக்கின்றனர். இது என் மைத்துனர் வீட்டின் நீச்சல் குளம். அங்குள்ள பாறைகளையும் கள்ளி முட்புதர்களை அப்படியே வைத்துக்கொண்டு அழகை கூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது மனதைக் கவர்ந்தது.

நோட்டில் வரைந்த பென்சில் வரைபடத்தை  அலைபேசியின் ஸ்கேனர் மூலம் கணினிக்கு மாற்றி பின்னர்  Paint 3D மூலம் வர்ணம் பூசினேன்.

இயற்கை காட்சிகளை வரைவதற்கும் கட்டிடங்களை வரைவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.

இது முக்கியமாக மாயப்புள்ளி ( vanishing point ) ஓவியம் வரைபவர்க்கு சரியாக பிடிபடவில்லை என்றால்  படம் தாறுமாறாகப் போய்விடும்.

அவர் வீட்டுக் கட்டிடத்தின் வெளி வராண்டாவைத் தேர்ந்தெடுத்து  அதை வரை புத்தகத்துள் அடக்க முயற்சித்தேன். அதன் விளைவே கீழேயுள்ள கறுப்பு வெள்ளை வரைபடம்.






வளைந்து செல்லும் விதானத்தின் முப்பரிமாண காட்சியே இதை வரைந்து பார்க்கத்தூண்டியது.  முக்கியமாக தூண்களின் நிலைகளும் அவற்றிற்கிடையே உள்ள இடைவெளியையும் புகைப்படத்தின் துணையில்லாமல் வரைவது என்பது பெரும் சவாலாகவே இருந்தது.

படத்தை வரைந்த பின் அதை மைத்துனருக்குக் காட்டியபோது சிறிது நேரம் உற்றுப்பார்த்து “அங்கே ஒரு  ஃபேன்  தொங்குமே அதைக் காணோமே” என்றார். “அது தூணுக்குப் பின்னால்  மறைஞ்சு இருக்கு” என்று விளக்கினேன். பின்னர் அவருடைய திருப்திக்காக வர்ணம் பூசும் போது  மின்விசிறியின் இறக்கைப் பகுதிகளை காட்டியிருக்கிறேன்.

உங்களுக்குத் தெரிகிறதா? 

மேலே காணும் படத்தில் மாயப்புள்ளி மறையும் இடம் எது?




Saturday, February 23, 2019

பனை ஓலையில் சித்திரங்கள்-ஒடிஷா

சமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன்.  அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது சுற்றினோம். அப்போது எனக்குப் பிடித்தது பிப்பலி என்ற கிராமப் பகுதியில் பல நூறு குடும்பங்கள் பல தலைமுறைகளாக தொடர்ந்து செய்து வரும் கைவினைப் பொருட்களாகும்.

இதில் குறிப்பிடத்தக்கது பனை ஓலையில் அங்குள்ள மக்கள் வரைந்து வரும் ஓவியங்கள் ஆகும். சிறிய ஓலைகள் பலவற்றை கூட்டி பெரிய பெரிய ஓவியங்களை வரைவது வேறெங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு.

ஏன் பனை ஓலைகள் ? காலங்காலமாக பதப்படுத்தப்பட்ட  பனை ஓலைகளிலேயே  அனைத்து நூல்களும் எழுதப்பட்டு வந்தது.  அவற்றை கறையான் அத்துப் பூச்சி முதலியவை தாக்காதவாறு மஞ்சள், வேப்பெண்ணெய் போன்ற காப்பு முறைகளையும் முன்னோர் அறிந்திருந்தனர். இதனால் பல நூற்றாண்டு காலம் இவைகள் சேதமுறாமல் பயனளித்தன.
இதனால் ஓவிய ஆர்வம் உள்ள மனிதன் பனை ஓலைகளிலும் தன் முயற்சியைக் காட்டத் தவறவில்லை.  நான் கண்டவற்றை காணொளியாக பதிவு செய்து அதை பின்னர் தொகுத்து யூட்யூபில்  வலையேற்றிருக்கிறேன்.  பன்னாட்டவருக்கும் நம் நாட்டின் பாரம்பரியம் தெரியட்டுமே என்று ஆங்கிலத்தில் விளக்கமும் சேர்த்திருக்கிறேன். அதை நீங்களும் கீழே கண்டு மகிழலாம். ஓவிய நுணுக்கத்தை பாரட்ட வேண்டுமானால் முழுத்திரை வடிவில் காண வேண்டும்.



எவ்வளவு தொன்மையான கலை! பாகவதக் கதைகளை இந்த ஓலகள் மூலம் சித்திரக் கதைகளாக சொல்லும் பழக்கம் அந்த காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. காமிக்ஸ் என்று புதிதாக வந்தது போல் நினைக்கின்றனர் பலர். இதிலும் பாரதம் முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓவியச் சுவடிகளே சாட்சி.

இந்த பதிவிற்கு என் பங்கையும் எதையாவது சேர்க்க வேண்டுமே!

எனக்கு பனையோலை கிடைக்கவில்லை, பாக்குப்பட்டை கிடைத்தது. Disposable plates செய்யப்படும் இந்த பாக்குப்பட்டையால் செய்யப்பட்ட ஒரு 8”x6" டிரே ஒன்று வீணாகப் போவதைக் கண்டேன். அதன் விளிம்புகள் முறையாகக் கத்தரிக்கப்படாததால் தரக் கட்டப்பாட்டு இலாகா அதை கழிவாக ஒதுக்கி விட்டிருந்தனர்.  அதில் ஒரு எளிமையான ஓவியம் ஒன்றை அக்ரிலிரிக் வர்ணம் கொண்டு தீட்டினேன்.  பச்சை, சிவப்பு, நீலம் மூன்றும் பளிச்சென்று வரவேண்டும் என்பதற்காக  கடலோரத்தில் குடைபிடித்திருக்கும் ஒரு (ஆப்பிரிக்க) பெண்மணியின் படத்தை தீட்டினேன்.

தூக்கிப் போடக் கிடந்த  ஒரு பொருள் இப்போது  வரவேற்பறை காட்சிப் பெட்டிக்குள் சேர்ந்து விட்டது.



தற்செயலாக இந்த படத்தை பார்த்த போது இதில் பஞ்ச பூத தத்வங்களுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பு என்னையறியாமலே வெளிப்பட்டுள்ளதோ என்று வியக்க வைத்தது.  மேலும் விவரங்களுக்கு அரவிந்த அன்னையின் இந்தக் கட்டுரையில் விளக்கத்தைக் காணவும்.