Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, January 27, 2009

பால் திருடும் பறவை

உணவு பழக்க வழக்கங்கள் ஊருக்கு ஊர், நாட்டிற்கு நாடு மாறுபடும். வளர்ப்பு பிராணிகளும் ஓரளவு மனிதனோடு சேர்ந்து இருப்பதாலோ என்னமோ சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. உதாரணத்திற்கு தில்லியில் அன்னத்தை நாய்களோ பசுவோ எதுவும் சீந்தாது. ஏன் காக்கைக் கூட எட்டி பார்க்காது.

அந்த ஊரில் காலையில் வீதியில் திரியும் பசுவைத் தேடிப்போய் ராத்திரி மிச்சமான ரொட்டியை கொடுத்தால் ஆனந்தமாக சாப்பிடுகிறது. நம்மூர் பசுக்களுக்கு சப்பாத்தி ருசிக்குமா என்று இன்னும் பரிட்சித்து பார்க்கவில்லை.

ஆனால் பறவைகள் புதிய உணவு முறைகளை கண்டறிந்து கொள்வதில் உள்ள வியப்பை கிரேட்-டிட் எனப்படும் இந்த பறவையை வைத்து ஆராய்கிறார்களாம்.

இது இங்கிலாந்தின் குருவி. துருதுருவென்று எப்போதும் கழுத்தையும் வாலையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக தவ்வித் திரியும். காலையிலே பால்காரன் வண்டி பின்னாலேயே தொடர்ந்து போகும். வாசலிலே பாட்டிலை வைத்து சென்றவுடனே அதன் மேல் அமர்ந்து மூடியிருக்கும் அலுமினியம் ஃபாயிலை துளையிட்டு பாலை குடிக்க ஆரம்பிக்கும்.

அதனால் அந்நாட்டில் பால் வழங்கும் முறையையே மாற்ற வேண்டியதாகப் போயிற்று!!

இந்த பால் தனக்கும் கூட உணவாகும் என்பதை எப்படி கண்டு கொண்டது ? துளையிட்டால் குடிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்ட நபர்களின் வருகைக்கும் பால் பாட்டிலுக்கும் உள்ள தொடர்பையும் எப்படி தெரிந்து கொள்கிறது. ? இவையெல்லாம் தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம்.
நமக்கு இறைவன் படைப்பில் எல்லாமே அதிசயதக்கதுதான். எறும்பு ’சர்க்கரை’ என்ற லேபிளைப் பார்த்தா சர்க்கரை டப்பாவை கண்டுகொள்கிறது ! எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவன் அதற்கு தேவையான அறிவையும் கொடுத்தே படைத்திருக்கிறான்.

பறவைகளைப் பற்றிய வர்ணத் தொடர் ஒன்றை செய்யலாம் என்றெண்ணி ஒரே அளவான அட்டையில் செய்த இரண்டாவது (கடைசி)படம் இது.

என்ன காரணத்தினாலோ இதை அப்போது(20 வருடத்திற்கு முன்) தொடர முடியவில்லை. முதலாவது தான் சென்ற பதிவில் பார்த்த மீன்கொத்திப் பறவை. திரும்பவும் அதே வகை அட்டை (அஞ்சல் அட்டை அளவு) கிடைத்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.

8 comments:

சதங்கா (Sathanga) said...

பறவை நன்றாக வந்திருக்கிறது. பறவை பற்றின தகவல்களும் அருமை.

நீங்கள் வரைந்த போது பெற்ற அனுபவத்தையும் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் !!!

//அப்போது(20 வருடத்திற்கு முன்) தொடர முடியவில்லை//

அதனாலென்ன, இப்போது தொடருங்கள். (ரொம்ப ஈ.ஸி.யா சொல்லிட்டனோ ??? =:))))

வடுவூர் குமார் said...

நான்,நீங்கள் மற்றும் பலவும் இங்கு அதிசியம் தான்.
உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.

KABEER ANBAN said...

நன்றி சதங்கா

அனுபவம் என்று குறிப்பாக ஒன்றும் நினைவில் இல்லை. அப்போது, இந்தப் பறவையைப் பற்றிய கட்டுரையில் படித்ததைத்தான் இணையத்தில் மீண்டும் தேடி பதிந்தேன் :) வரைவதில் ஏதும் சிரமம் இருக்கவில்லை.

//...அதனாலென்ன, இப்போது தொடருங்கள். //

நான் பயன்படுத்திய அட்டை இப்போதைய அஞ்சல் அட்டையை விட சற்றே பெரியது. ஆனால் அஞ்சல் அட்டை அல்ல. அப்போது என் ஆராய்ச்சி பற்றிய விவரங்களை (Abstracts)சேமிக்கப் பயன்படுத்தி வந்தேன். மீண்டும் கிடைத்தால் செய்யலாம். :))

KABEER ANBAN said...

வாங்க குமார்

///நான்,நீங்கள் மற்றும் பலவும் இங்கு அதிசியம் தான்///

:)))

வாழ்த்துகளுக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தகவல்கள்.. ஓவியமும் அழகு..

KABEER ANBAN said...

நல்வரவு முத்துலெட்சுமி-கயல்விழி

ஓவியத்தை வரையும் போது அறிந்திருந்த தகவலை பின்னர் பதிவுக்காக தேடி சேர்த்தேன்.:))

பாராட்டுக்கு நன்றி

dharshini said...

அருமையான தகவல்கள்
இந்த படத்த பார்த்த‌தும் வரைய தூண்டுகிறது....
கூடிய சீக்கிரத்தில் வரைந்திடுவேன்.

KABEER ANBAN said...

நன்றி தர்ஷினி,

//கூடிய சீக்கிரத்தில் வரைந்திடுவேன்//

க்ளாஸ் பெயிண்டிங்காகவா ? :))
வரைந்தபின் சொல்லவும். வாழ்த்துகள்