Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, August 2, 2018

அக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர்

அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக  கண்ணைக் கவரும் வகையில்  மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும்.

ஆனால் இதில் வர்ணம் பூச சற்று பொறுமையும்  திட்டமிடுதலும் அவசியம்.

ஏனப்படி என்றால் ஆயில் வர்ணம் போலல்லாது மிக வேகமாக உலர்ந்து விடும் தன்மை உடையது. ஒருமுறை உலர்ந்து போனால் அது மீண்டும் நீரில் கரையாது. இதனால்  அடுக்கு முறையில் வர்ணம் ( Layering technique) பூச முயலும் போது பூசப்பட்ட வர்ணம் புது வர்ணத்தோடு குழைந்து ஒன்றாக இணையாது. தனித்தனியாகத் தெரியும்.

எதனாலோ இது எனக்கு சுகப்பட்டு வரவில்லை. என் திட்டமிடும் தன்மை மிக மிக பலஹீனமானதாக இருக்கலாம். எப்படியோ கஷ்டப்பட்டு  என் முதல் முயற்சியாக ஆரம்பித்த இரண்டு சிங்கங்களின் ஓவியத்தை  முடித்தேன்.

இதன் பின்னர் அந்த  அக்ரிலிக் டப்பாவை மூடி வைத்ததுதான், ஒன்றரை வருடம் அதை திரும்பிப் பார்க்கவில்லை.

ஆனால் வேளை வந்தால் யார் காலை வேண்டுமானாலும் பிடிக்க வேண்டி வரலாம் !
( நான் கர்நாடகா அரசியல் நிலவரம் பற்றிச் சொல்லவில்லை :)))

என்னுடைய  மொபைல் ஃபோன் மேலுறையின் மேலிருந்த மெல்லிய தாள் பூச்சு சிறிது சிறிதாய் உரிந்து போய் பார்ப்பதற்கு அகோரமாய் எல்லோரிடமும் எனக்கு திட்டு வாங்கித்தந்தது. புதிதாக ஒன்றை வாங்கிக்கொள்ளலாம் என்று கடை கடையாய் ஏறி இறங்கினேன் ( பிறத்தியாரை திருப்தி படுத்தத்தான்!) எங்கும் என்னுடைய மாடலுக்கு இல்லை என்றே பதில் வந்தது.

அந்த மேலுறை இன்னமும் திடமாகத்தான் இருக்கிறது. அதனால் அதை தூக்கிப்போடவும் மனம் வரவில்லை. அதன் மேல் ஏதேனும் Vinyl Sticker படம் ஒன்றை ஒட்டி விடலாம் என்று பார்த்தால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போது தான் நினைவுக்கு வந்தது அக்ரிலிக் கலர் டப்பா !!

வேகமாக உலரும், உலர்ந்தபின் ஒட்டாது, கரையாது; பார்ப்பதற்கும் பளிச் என்றிருக்கும். இது தானே வேண்டும். தேடி எடுத்தேன் அந்த டப்பாவை.

வர்ணங்கள் யாவும் சற்றே காய்ந்து சீக்கிரத்திலேயே பயனிழந்து விடும் நிலை அடைந்திருந்தது. பச்சை வெள்ளை இரண்டையும் கலந்து உடனே இரண்டு பக்கங்களுக்கும் பூசினேன். பின்பக்கத்தை சற்று அடர் பச்சையாகவும் முன்பக்கத்தில் வெளிர் பச்சையாகவும் தயார் செய்து  அதன் மேல்  ஒரு சிரிக்கும் புத்தனை  மார்க்கர் பேனாவால் வரைந்து விட்டேன்.


Laughing Buddha  அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அள்ளித் தருபவராம்.  தாமரை பூ, செல்வம், பெரிய காது, தொப்பை,  கையில் ஜெபமாலை, ஆனந்த நிலை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது நம்முடைய விநாயகரை அவர்கள் நாட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. சில படங்களில் அவர் கைக்கு ஒரு குடையை கொடுத்து ஒரு காலை தூக்கியவண்ணம் வரைந்திருப்பது வாமன அவதாரத்தை நினைவூட்டுகிறது.

எப்படியோ தூக்கிபோட இருந்த மேலுறைக்கு இன்னமும் சிறிது நாள் ஆயுள் அக்ரிலிக் வர்ணத்தால் கிடைத்திருக்கிறது.


Friday, January 12, 2018

ஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி


    ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற  ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass  என்பது ஒரு வகை. இது எடை குறைவான சட்டத்தில் நன்றாக இழுத்து பொடி ஆணிகளினால் பொருத்தப்பட்ட கெட்டியான துணி.

ஒரு பத்திரிக்கையில் வந்த புகைப்படத்தில் மேகங்கள், நீரில் கதிரவன் பிரதிபலிப்பு இவற்றின் அழகைக் கண்டு அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன்.  அதன் பின்னர் வேறொரு புகைப்படத்தில் கண்ட  ஒரு நாட்டியக் குழுவின் அபிநய  பங்கியை  நிழற்படமாக  மாற்றி வரைந்து அவர்கள் சூரிய வணக்கம் செய்வதாக முடித்து கொஞ்சம் நாட்கள் வரவேற்பு அறையில் மாட்டி வைத்திருந்தேன்.  பல முறை வீடுகளை மாற்றியதில் அதற்கு முக்கியத்துவம் குறைந்து எங்கோ கேட்பாரின்றி  பெட்டி அடிக்கு சென்று விட்டது. சமீபத்தில் அதை பார்த்த போது பொங்கலுக்கு ஏற்ற படம் என்று தோன்றியதால் அதை பிரசுரிக்கிறேன்.

இதற்குப் பொருத்தமாக சூரிய காயத்ரி மந்திரத்தை  படத்தின் அடிப்பக்கத்தில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் 

பாஸ்கராய வித்மஹே, மஹத் த்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யப் பிரசோதயாத்


ஆனால் கோணல்மானலாகப் போய்விட்டால் படத்தின் அழகு போய்விடும் என்ற பயத்தால் அதை எழுத தைரியம் வரவில்லை. இந்த பதிவின் மூலம் அந்த ஆசையை நிறைவு செய்து கொள்கிறேன்.

பாரதியாரும்   ஞாயிறு வணக்கம் என்ற நல்லதொரு கவிதையை செய்திருக்கிறார். அதன் வரிகளும் இதற்கு பொருத்தமானதே.

என்றனுள்ளே கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று  தன்னகத்து ஒவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா
...........................................................
--------------------------------------------
ஆதித்  தாய் தந்தை நீவிர் உமக்கே
ஆயிரம்தரம் அஞ்சலி செய்வோம்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

இன்று ( 12 ஜனவரி) வீரத் துறவி விவேகானந்தரின் ஜயந்தியும் ஆகும்.  பாரதமாதாவை மிக உயர்ந்த அரியணையில், குமரி முனைப் பாறையில் தவத்தில் கண்டு உலகிற்கு பறை சாற்றியவர். அவருக்கு ஏதாவது வகையில் அஞ்சலி செய்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சியே கீழே காணும் போட்டோஷாப் செய்யப்பட்ட படம்.

( படத்தை சுட்டினால்  எழுதியிருப்பதை படிக்க முடியும்)

அவர் கன்னியாக்குமரி பாறையில் அமர்ந்து மூன்று நாள் தியானத்தில் கண்ட காட்சியே அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது.   போட்டோ ஷாப்பில்  அதற்கு உரு கொடுக்க என்னுடைய ஓவியத்தையே பயன்படுத்திக் கொண்டேன்.  உங்களால் விவேகானந்தர் சூட்சும வடிவில் அமர்ந்திருப்பதை காண முடிகிறதா ?  _/\_

Thursday, January 4, 2018

காந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு

அனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே முயற்சி செய்யப்பட்ட மையக்கருத்து எவ்வளவு தூரம் வெற்றிப் பெற்றுள்ளது என்பதே முக்கியம்.

மகாத்மா காந்தி  எழுதுவதற்கு பென்சிலை சீவினால் அதனை கூராக்க மாட்டாராம். ‘கூராக்கினால் கரித்துகள் வீணாகுமே. அதை வைத்து எவ்வளவோ எழுதுவது பயன்படாமல்  போகுமே” என்று சொல்வாராம்.

குறைவில் நிறைவை கண்டவர் அவர் !

நேற்று சில வர்ண பென்ஸில்களை சீவிக் கொண்டிருக்கும் போது அதன் சீவல்களோடு வெளிப்பட்ட  வர்ணப் பொடிகள் காந்திஜியை நினைவு படுத்தியது. மீதியை கீழே உள்ள படத்தை சுட்டினால் விவரமாகப் படிக்கலாம்.



ஓரளவு  தாளின் மடிப்புப் பகுதியை வர்ணத்தின் மூலமாக மறைக்க  முடிந்தாலும் பென்சில் வர்ணத்தின் அடர்த்தி குறைவாகவே பட்டது. அதனால் ஒரு சிறிய தூரிகை உதவியால் அங்கங்கே சற்று நீர் வர்ணத்தில் அலைகளை வரைந்து  அங்கே ஒரு மீன்பிடிப்பவரின் வலை வீசும் காட்சியையும் சேர்த்தேன். இப்போது படம்  சற்று பரவாயில்லை என்று தோன்றியது.


இதில் என்ன பரிட்சார்த்தம் என்று தோன்றலாம். 

முதலாவது, வீணாகக் கிடந்த ( ஒருபக்கமே பயன்பட்ட ) வெள்ளைத்தாள்  தூக்கி எறியப்படக் கிடந்த பென்ஸிலின் வர்ணத் துகள்கள்  இரண்டும்சேர்ந்து ஒரு சித்திரமாகியது.  எனக்கு நேரமும் உபயோகமாகக் கழிந்தது.

   இரண்டாவதாக,  மூன்று சித்திரங்களை தனித்தனியாக   வலையேற்றி  இணைப்பதற்கு பதிலாக ஒரே சித்திரமாக  மாற்றி அதன் தொடர்பான விஷயத்தையும் - சித்திரக் கதையாக- சொல்ல முயற்சித்திருக்கிறேனே அது மகாத்மா காந்தி வழியில் சிக்கனத்தை நானும்  சிந்திக்கிறேன் என்பதை காட்டுகிறதல்லவா :)))))

Sunday, December 17, 2017

ஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.


சில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ படம் ’வாட்ஸ்-ஆப்’ ல் வலம் வந்து கொண்டிருந்தது.

அது என்ன ஆச்சரியம்?

 பல டன்கள் எடையுள்ள பெரும் பாறைகளை எப்படி கடைந்து வேலைப்பாடுடைய தூண்களாக மாற்றியுள்ளார்கள் , அதுவும் 900 வருடங்களுக்கு முன்பு? அதற்கான இயந்திரங்கள் இருந்தனவா? அந்த தொழில் நுட்பம் (machining technology) பற்றிய தகவல்கள் எதுவும் இல்லையே ஏன்? இப்படி பல கேள்விகளை முன் வைக்கும் வீடியோ விற்கு இங்கே சுட்டவும்.



மரத்தில் கட்டில் நாற்காலி போன்றவற்றிற்கு சிறிய கடைசல்-பொறி சட்டத்தில் மரத் துண்டைப் பொருத்தி, சுழல விட்டு கூரிய உளி நுனியால் சிறிது சிறிதாக சீவி எடுத்து வேலைப்பாடு மிக்க கால்களை தயாரிக்கும் திறமை காலங்காலமாக தெரிந்து வந்திருக்கிறது. இதை தற்காலத்தில் லேத் எந்திரங்களில் துல்லியமாகச் செய்யலாம்.

ஆனால் பல டன் எடையுள்ள பத்து பன்னிரண்டு அடிக்கும் உயரமான பெரும் பாறாங்கல்லை சுழற்றுவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இதைப்பற்றியே இரண்டு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒன்று தோன்றியது. கல்லை ஏன் சுழற்ற வேண்டும்? அதற்கு பதிலாக அந்த கல்-உளியை சுற்றி வரத் தேய்த்தால் ? உடனே நினைவிற்கு வந்தது செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் முறைதான். அதனை சற்றே மாற்றி அமைத்தால் பெரும் கல்லையும் கடைந்து தூண்கள் செய்யலாம். கீழே உள்ள படம் அந்த முறையை கோடிட்டு காட்டுகிறது.


( Click on the figure to view larger picture)

 கல்லைத் தாங்கும் மேடை  ( pedastal) பெரிய மரத்தின் அடிப்பாகமாக இருக்கலாம் அல்லது இன்னொரு செம்மை படுத்தப்பட்டகல்லாகவும் இருக்கலாம். சுற்றிவரும் மரச்சட்டம் அதன் உரல் போன்ற சிறுத்த இடைப்பகுதியில் சுழற்சிக்கு ஏதுவாக தளர்வாக வில் போன்ற அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும். எண்ணெய் செக்குகளின் படத்தைப் பார்த்தால் புரியும்.

 கல்லுளியைக் கொண்டு சுற்றிச் சுற்றி தேய்க்க வேண்டுமானால் அதற்கு ஏதேனும் சக்தி வாய்ந்த காளை, குதிரை யானை போன்ற மிருகங்களால்தான் முடியும். மேலும் அவ்வளவு பெரிய கற்களை இடம் விட்டு இடம் நகர்த்தவும், தூண்களைத் தூக்கி நிறுத்தவும் யானைகள் கண்டிப்பாக பயன்பட்டிருக்கும். சோழர்கள் காலத்தில் யானையைக் கட்டி போரடித்ததாக (நெற்கதிர் பிரித்தல் ) வழக்குண்டு. அதனால் தான் கல்லை சுரண்டி எடுக்கும் வேலைக்கும் யானையை மிருகங்களின் பிரதிநிதியாக வரைந்தேன்.

 இந்த விளக்கப்படம் Paint-3D ல் வரையப்பட்டது.

 கல்லைத் தேய்ப்பது அவ்வளவு சுலபமா? இதற்கு விடை ஏற்கனவே என் பேலூர் சிற்பங்கள் பதிவில்  சொல்லியிருக்கிறேன்(Click the 'Label' word below the article). Soap stone எனப்படும் இவைகளை கூரிய நுனியால் எப்படி வேண்டுமானாலும் செதுக்கலாம். நம் காலத்தில் ஆரம்பப் பள்ளியில் பயன் படுத்திய சிலேட் பலகையும் இந்த வகையை சேர்ந்து தான்.

 சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சும்மா கிடந்த சிலேட்டுப் பலகையில் நான் செதுக்கிய சிற்பத்தைத் தான் கீழே பார்க்கிறீர்கள். வீட்டில் கிடந்த சிலேட்டை ஒரு கலைப் பொருளாக மாற்றுவதற்கு பயன்பட்டது ஒரு screw driver. அந்த மயில் படம், அந்த காலத்து இன்லேண்ட் லெட்டரில் காணப்பட்ட தபால் தலை சித்திரமாகும்.




எப்படியோ ஹொய்சளர்கள் புதிர் ஒன்றை விடுவித்தாயிற்று.  இதற்காக யாரும் பரிசுத் தரப் போவதில்லை என்பது வேறு விஷயம். வாசகர்களின் பாராட்டுகளே பெரிய பரிசு :)) 

Saturday, December 2, 2017

Paint3 D -ல் சில முயற்சி

விண்டோஸ் 10-ல்  Paint 3D என்கிற புது மென்பொருளை சேர்த்திருக்கிறார்கள்.  எனக்கு பெரும்பாலும்  அவர்களின் Paint அதிகப் பழக்கப்பட்டிருந்ததாலும்,  Adobe Photoshop இருந்ததாலும்  இதை கண்டு கொள்ளவே இல்லை.  சமீப காலமாக  ஃபோட்டோ ஷாப் தொந்தரவு கொடுத்ததால்  [எவ்வளவு நாளக்கு ஓசி கொடுப்பான் :-) ] பல நல்ல உபகரணங்கள் இல்லாமல் சிரமமாக இருந்தது. சரி, Paint 3D -ல் என்னதான் செய்ய முடியும் பார்க்கலாம் என்று திறந்தேன்.

இது Google Sketch up ஐயும் Adobe photo shop ஐயும் சேர்த்துப் பண்ணிய அவியல். இரண்டில் எதையும் உருப்படியா காப்பி அடிச்ச மாதிரி தெரியவில்லை.

Adobe Photoshop முன்னால் இது ஒன்றுமே இல்லை. ஆனாலும் MS Paint ஐ காட்டிலும் பலவிதங்களில் முன்னேற்றம் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரே வர்ணத்தை பல விதங்களில், பல அடர்த்திகளில் பூசுவதற்கு வசதி உண்டு. அதே போல் நீர் வர்ணம், எண்ணெய் குழைவு, பென்சில், CRAYON, SKETCH PEN  என்கிற பல முன்பே இருந்தாலும்  MS Paint அடர்த்தி மாற்றங்கள்  செய்ய இயலாததால்  அவற்றை அவ்வளவாக பயன்படுத்த முடியவில்லை. 

இன்னொரு முன்னேற்றம் என்னவென்றால் நாம் வரைபடத்தை  பல கோணங்களில் சுழற்றி, வேண்டியவாறு அதை பொருத்திக் கொள்ளலாம். இது மூன்று நான்கு வரைபடைங்களை இணைப்பதற்கும்  சில special effects  கொடுப்பதற்கும் பயன்படும். இதை தவிர சில 3D பொருட்களை வரைந்து, பலூன் போல அதை விரித்து சுருக்கி பல  கோணங்களில் பொருத்தி பார்க்கலாம்.   அதில் நாய் பூனை என்று எதை முயற்சித்தாலும் களிமண்ணில் செய்யப்படும் மாடல் போல இருக்கிறது. அதற்கு உயிர் கொடுக்க வழி இருக்கிறதா என்று தேட வேண்டும்.

வித்யாவாஹினி  தன்னார்வக் குழு கேட்டுக் கொண்டதன் பேரில் கிராமத்து பெண்மணியின் வாழ்க்கை என்பது பற்றி சில படங்களை வரைந்து கொடுத்தேன். அதில் ஒரு சிலவற்றை Paint 3D வைத்து வர்ணம் பூசி பார்த்தேன்.  அதில் ஒரு சில.

இதில் ஆட்டுகல்லும் அந்த பெண் அமர்ந்திருக்கும் படிக்கல்லும் digital கிரேயான் கலர் வைத்து செய்யப்பட்டுள்ளது.


ஒரே படத்தை  எப்படி பல வர்ணங்களாகவும்  வேறு முகபாவங்களை வெளிப்படுத்துமாறு மாற்றலாம் என்பதை மேலே காணலாம்.  ( படங்களை சொடுக்கினால் பெரியதாகக் காணலாம்)






எப்படியோ, MS Paint  ஆரம்பப் பள்ளியை தாண்டி  உயர்நிலை பள்ளிக்கு வந்தாச்சு.  இன்னும் Adobe,  Google  போல கல்லூரி நிலையை எட்டிப்பிடிக்க  எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியாது.

உயர்நிலை பள்ளிக்கூடம்  வரைக்கும்தான் இலவச கல்வி அதன் பின் செலவழிக்கத் தயாராக வேண்டும் :)))




Wednesday, October 25, 2017

மேய்ப்பவர் அவரே உலகையெல்லாம்....


        என்னுடைய பழைய தினக் குறிப்பேட்டில் பொழுது போகாதபோது எதையாவது டூடுல் (doodle) செய்வது வழக்கம். இதை சிலர் Scrap book என்பர். பெரிய சித்திரக்காரர்கள் அதற்கென தனியாக படங்கள் வரைவதற்கேற்ற -acid free, 110 GSM, lignin free, pure cellulose- காகிதம் கொண்ட பெரியதும் சிறியதுமாகிய பல அளவுகளில் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். நானோ கத்துகுட்டி.
 யாரோ கொடுத்து பயனில்லாமல் கிடந்த 2010 டைரி இப்போது என்னுடைய Scrap Book.  ஏழைக்கேத்த எள்ளுருண்டை !!

எதற்காக இவ்வளவு பில்டப் என்றால் கீழே உள்ள பட த்தைப் பார்த்து ஏன் இப்படி ஏனோ தானோவென்று படம் போட்டிருக்கிறீரென்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.


 யோகானந்த பரமஹம்ஸர், விவேகானந்தருக்கு அடுத்து மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், நமது தேசத்தின் புராதன தியான யோக பெருமைகளை நிலைநாட்டியவர். அவர் அங்கேயே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்து யோகதா சத்சங்கம் என்பதை நிறுவி தற்போது அது நூற்றாண்டு விழா உலகெங்கும் கொண்டாடி வருகிறது. ( https://www.yogananda-srf.org/ )

 அவருடைய சீடர் டிகின்ஸன் ( Dickinson ) என்பவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி.

டிகின்ஸன் ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது விளையாட்டாக அவருடைய அண்ணன் அவரை பதினைந்து அடி ஆழ நீர் நிலையில் தள்ளி விடுகிறார். நீச்சல் தெரியாத சிறுவன் ஒரு முறை மேல் வந்து திரும்பவும் மூழ்கும் சமயம் வானில் ஒரு பேரொளி அதன் நடுவில் அருளே வடிவான ஒருவர் முகம் தெரிகிறது.

 இரண்டாம் முறை மேலெழும் போது பல சிறுவர்கள் சேர்ந்து அவரை காப்பாற்றுகின்றனர். பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து, 1893-ல், சிகாகோ நகரில் தன் தாயாருடன் நடந்து செல்லும் போது தனக்கு முன் அதே பேரொளி செல்வதை காண்கிறார். அதை தொடர்ந்து சென்றால் அந்த மனிதர் மேடை மேல் பல்வேறு சமயத் தலைவர்களுடன் வீற்றிருந்தார். சொற்பொழிவுகள் முடிந்ததும் அவர் விவேகானந்தர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் அருகே தன் தாயாருடன் சென்றார். அவரை கண்டதுமே அன்பு பொங்க “இளைஞனே நீரிலிருந்து தூர இரு “ என்று அறிவுறுத்துகிறார்.

 ‘ஓ இவர் எனக்கு வழிகாட்டமாட்டாரா’ என்ற எண்ணம் ஓடியது டிகின்ஸன் மனதில். அதைப் பற்றி எதுவும் சொல்லாமலே விவேகானந்தர் ‘உன்னுடைய குரு உனக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றை பரிசாக அளிப்பார். உன்னால் பிடிக்க முடியாத அளவுக்கு அவர் அருள் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும்’ என்று அவருடைய ஆன்மீக வாழ்க்கை தடைபடாது என்பதை முன்கூட்டியே உரைத்தார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் டிகின்ஸன்னின் எண்ணத்தில் ஆழப்பதிந்தன.

ஆண்டுகள் பல உருண்டன. யோகதா சத்சங்கத்தில் உறுப்பினராகி பதினோரு ஆண்டுகள் மூன்று வேளையும் விடாது தியானம் பயின்று வந்தார். யோகானந்த பரமஹம்ஸருக்கு நெருங்கியவராக இருந்த போதும் விவேகானந்தருடன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல நினைவே எழவில்லை. 1936-ல் கிருஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சந்தாகிளாஸ் வேடம் பூண்டு அனைவருக்கும் புத்தாண்டு பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமி யோகானந்தா. மீண்டும் அதே பேரொளி! “டிகின்ஸன் இது உனக்கு” என்று கொடுத்த பரிசு பொட்டலத்தை பிரித்தால் அதனுள் ஒரு வெள்ளிக் கிண்ணம்.

    டிகின்ஸனுக்கு பழைய நிகழ்வுகள் மீண்டும் மனதில் நிழலாடியது. யோகானந்தரே தனது குரு என்பதை அவருடனேயே இருந்தும் அறியாமல் போனேனே என்ற பச்சாதாபம் மனதில் எழுந்தது.

 நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமி விவேகானந்தரின் வாக்கு பலித்தது கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

(Autobiography of a YOGI, ISBN 978-81-89535-51-3, Indian ed. 2016; chapter 47) 

ஆன்மீக உலகம் என்பது விஞ்ஞான உலகத்திற்கு எதிர் துருவம் என்பர். தனிபட்டவரின் வாழ்வில் ஆன்மீக முன்னேற்றம் போல சமூகத்தில் ஆன்மீக முன்னேற்றத்திற்கு யோகிகளும் ஞானிகளும் அவதரித்துக் கொண்டே இருக்கின்றனர். இயேசு சொல்வது போல ’ நல்ல ஆயர்கள் அவர்களே’(John 10:11)

   "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்."

இன்றும் யோகதா சத்சங்கங்களில் ஏசுவின் படமும் கிருஷ்ணரின் படமும் யோகதா குருமார்களின் படமும் தியான அறையில் ஒரு சேர வழிபடப்படுகின்றன. பிரிந்து கிடக்கும் சமுதாயங்களை ஒன்று படுத்தும் பாலமாக அவதாரங்களின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Sunday, October 8, 2017

அரசமரத்தடி நினைவுகள்

     கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது இந்த வலைப்பூவில் பதிவு எழுதி !  அதாவது படம் போடாமலில்லை ஆனால் பதிவுக்கு தகுந்த தகுதி  இருக்கிறதா என்று புரியவில்லை. அதனாலேயே  தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். இனியும் காலம் கடத்தக்கூடாது என்ற ஒரே நோக்கோடு  இப்போது  பதிவிடுகிறேன்

புட்டபர்த்திக்கு செல்லும் வழியில்  லேபாக்ஷி கோவிலுக்கு   சென்றேன்.  எதிரில் பெரிய அரசமரத்தடியில்  இரண்டு  கறிகாய் விற்பவர்கள், வேறு சில பெண்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு தம்மளவில் உரையாடிக்கொண்டிருந்த  காட்சி, அங்கிருந்த கிராமிய சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. உடனே அதை அலை பேசியில் படம் பிடித்து  பின்னர் அதை கோட்டோவியமாக வரைந்து பார்த்தேன். அந்த பெரிய அரசமரத்தின் பரிமாணம்  அதனடியில் அமர்ந்திருப்பவர்களின் அளவைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். அது ஓரளவு  சரியாக வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.


இதையே  பின்னர்  டிஜிடல் வர்ணமுறையில்  வர்ணம் செய்ய முயற்சித்தேன். ஆனால் போட்டோஷாப் பழைய வெர்ஷன் ஆனதால் அடிக்கடி முரண்டு பிடித்து வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்தது. எனக்கும்  பொறுமை போய் முடிந்தவரைக்கும் போதும் என்று  வலையேற்ற துணிந்து விட்டேன்.

அதுவே நீங்கள் கீழே காணும் படம்.

லேபாக்ஷி கோவில் கர்நாடகா-ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து சுமார் 150 கிமி தூரத்தில் உள்ளது.  அதன் வரை படங்களை இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.

மரங்களில் புனிதமாக போற்றப்படும் அரசமரம் எங்கும் வளரக்கூடியது. போதி மரம் எனப்படும் அரசமரத்தடியில்தான் புத்தருக்கு ஞானம் வந்ததாக சொல்வர். இதை அசுவத்த மரம் என்று விஷ்ணு ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.  விருக்ஷங்களில்  நான் அஸ்வத்தம் என்று கிருஷ்ணர் கீதையில் உரிமை கொண்டாடுகிறார்.
இந்த மரம் மட்டுமே இரவிலும்  கரிமலவாயுவை  எடுத்துக் கொண்டு ஆக்ஸீகரணம் செய்ய வல்லது.  காற்றிலுள்ள கரிமலவாயுவை மீண்டும் பிராணவாயுவாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பது அரசமரம் என்று சொல்லப்படுகிறது. ஆயுர்வேதத்திலும்  அரசமரத்தின் பாகங்கள் பெரிதும் போற்றப்படுகின்றது

இயற்கையின் முன்னர் மானிடர் என்றும் சிறியவரே.