Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, February 23, 2019

பனை ஓலையில் சித்திரங்கள்-ஒடிஷா

சமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன்.  அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது சுற்றினோம். அப்போது எனக்குப் பிடித்தது பிப்பலி என்ற கிராமப் பகுதியில் பல நூறு குடும்பங்கள் பல தலைமுறைகளாக தொடர்ந்து செய்து வரும் கைவினைப் பொருட்களாகும்.

இதில் குறிப்பிடத்தக்கது பனை ஓலையில் அங்குள்ள மக்கள் வரைந்து வரும் ஓவியங்கள் ஆகும். சிறிய ஓலைகள் பலவற்றை கூட்டி பெரிய பெரிய ஓவியங்களை வரைவது வேறெங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு.

ஏன் பனை ஓலைகள் ? காலங்காலமாக பதப்படுத்தப்பட்ட  பனை ஓலைகளிலேயே  அனைத்து நூல்களும் எழுதப்பட்டு வந்தது.  அவற்றை கறையான் அத்துப் பூச்சி முதலியவை தாக்காதவாறு மஞ்சள், வேப்பெண்ணெய் போன்ற காப்பு முறைகளையும் முன்னோர் அறிந்திருந்தனர். இதனால் பல நூற்றாண்டு காலம் இவைகள் சேதமுறாமல் பயனளித்தன.
இதனால் ஓவிய ஆர்வம் உள்ள மனிதன் பனை ஓலைகளிலும் தன் முயற்சியைக் காட்டத் தவறவில்லை.  நான் கண்டவற்றை காணொளியாக பதிவு செய்து அதை பின்னர் தொகுத்து யூட்யூபில்  வலையேற்றிருக்கிறேன்.  பன்னாட்டவருக்கும் நம் நாட்டின் பாரம்பரியம் தெரியட்டுமே என்று ஆங்கிலத்தில் விளக்கமும் சேர்த்திருக்கிறேன். அதை நீங்களும் கீழே கண்டு மகிழலாம். ஓவிய நுணுக்கத்தை பாரட்ட வேண்டுமானால் முழுத்திரை வடிவில் காண வேண்டும்.



எவ்வளவு தொன்மையான கலை! பாகவதக் கதைகளை இந்த ஓலகள் மூலம் சித்திரக் கதைகளாக சொல்லும் பழக்கம் அந்த காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. காமிக்ஸ் என்று புதிதாக வந்தது போல் நினைக்கின்றனர் பலர். இதிலும் பாரதம் முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓவியச் சுவடிகளே சாட்சி.

இந்த பதிவிற்கு என் பங்கையும் எதையாவது சேர்க்க வேண்டுமே!

எனக்கு பனையோலை கிடைக்கவில்லை, பாக்குப்பட்டை கிடைத்தது. Disposable plates செய்யப்படும் இந்த பாக்குப்பட்டையால் செய்யப்பட்ட ஒரு 8”x6" டிரே ஒன்று வீணாகப் போவதைக் கண்டேன். அதன் விளிம்புகள் முறையாகக் கத்தரிக்கப்படாததால் தரக் கட்டப்பாட்டு இலாகா அதை கழிவாக ஒதுக்கி விட்டிருந்தனர்.  அதில் ஒரு எளிமையான ஓவியம் ஒன்றை அக்ரிலிரிக் வர்ணம் கொண்டு தீட்டினேன்.  பச்சை, சிவப்பு, நீலம் மூன்றும் பளிச்சென்று வரவேண்டும் என்பதற்காக  கடலோரத்தில் குடைபிடித்திருக்கும் ஒரு (ஆப்பிரிக்க) பெண்மணியின் படத்தை தீட்டினேன்.

தூக்கிப் போடக் கிடந்த  ஒரு பொருள் இப்போது  வரவேற்பறை காட்சிப் பெட்டிக்குள் சேர்ந்து விட்டது.



தற்செயலாக இந்த படத்தை பார்த்த போது இதில் பஞ்ச பூத தத்வங்களுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பு என்னையறியாமலே வெளிப்பட்டுள்ளதோ என்று வியக்க வைத்தது.  மேலும் விவரங்களுக்கு அரவிந்த அன்னையின் இந்தக் கட்டுரையில் விளக்கத்தைக் காணவும்.