Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, August 2, 2018

அக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர்

அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக  கண்ணைக் கவரும் வகையில்  மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும்.

ஆனால் இதில் வர்ணம் பூச சற்று பொறுமையும்  திட்டமிடுதலும் அவசியம்.

ஏனப்படி என்றால் ஆயில் வர்ணம் போலல்லாது மிக வேகமாக உலர்ந்து விடும் தன்மை உடையது. ஒருமுறை உலர்ந்து போனால் அது மீண்டும் நீரில் கரையாது. இதனால்  அடுக்கு முறையில் வர்ணம் ( Layering technique) பூச முயலும் போது பூசப்பட்ட வர்ணம் புது வர்ணத்தோடு குழைந்து ஒன்றாக இணையாது. தனித்தனியாகத் தெரியும்.

எதனாலோ இது எனக்கு சுகப்பட்டு வரவில்லை. என் திட்டமிடும் தன்மை மிக மிக பலஹீனமானதாக இருக்கலாம். எப்படியோ கஷ்டப்பட்டு  என் முதல் முயற்சியாக ஆரம்பித்த இரண்டு சிங்கங்களின் ஓவியத்தை  முடித்தேன்.

இதன் பின்னர் அந்த  அக்ரிலிக் டப்பாவை மூடி வைத்ததுதான், ஒன்றரை வருடம் அதை திரும்பிப் பார்க்கவில்லை.

ஆனால் வேளை வந்தால் யார் காலை வேண்டுமானாலும் பிடிக்க வேண்டி வரலாம் !
( நான் கர்நாடகா அரசியல் நிலவரம் பற்றிச் சொல்லவில்லை :)))

என்னுடைய  மொபைல் ஃபோன் மேலுறையின் மேலிருந்த மெல்லிய தாள் பூச்சு சிறிது சிறிதாய் உரிந்து போய் பார்ப்பதற்கு அகோரமாய் எல்லோரிடமும் எனக்கு திட்டு வாங்கித்தந்தது. புதிதாக ஒன்றை வாங்கிக்கொள்ளலாம் என்று கடை கடையாய் ஏறி இறங்கினேன் ( பிறத்தியாரை திருப்தி படுத்தத்தான்!) எங்கும் என்னுடைய மாடலுக்கு இல்லை என்றே பதில் வந்தது.

அந்த மேலுறை இன்னமும் திடமாகத்தான் இருக்கிறது. அதனால் அதை தூக்கிப்போடவும் மனம் வரவில்லை. அதன் மேல் ஏதேனும் Vinyl Sticker படம் ஒன்றை ஒட்டி விடலாம் என்று பார்த்தால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போது தான் நினைவுக்கு வந்தது அக்ரிலிக் கலர் டப்பா !!

வேகமாக உலரும், உலர்ந்தபின் ஒட்டாது, கரையாது; பார்ப்பதற்கும் பளிச் என்றிருக்கும். இது தானே வேண்டும். தேடி எடுத்தேன் அந்த டப்பாவை.

வர்ணங்கள் யாவும் சற்றே காய்ந்து சீக்கிரத்திலேயே பயனிழந்து விடும் நிலை அடைந்திருந்தது. பச்சை வெள்ளை இரண்டையும் கலந்து உடனே இரண்டு பக்கங்களுக்கும் பூசினேன். பின்பக்கத்தை சற்று அடர் பச்சையாகவும் முன்பக்கத்தில் வெளிர் பச்சையாகவும் தயார் செய்து  அதன் மேல்  ஒரு சிரிக்கும் புத்தனை  மார்க்கர் பேனாவால் வரைந்து விட்டேன்.


Laughing Buddha  அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அள்ளித் தருபவராம்.  தாமரை பூ, செல்வம், பெரிய காது, தொப்பை,  கையில் ஜெபமாலை, ஆனந்த நிலை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது நம்முடைய விநாயகரை அவர்கள் நாட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. சில படங்களில் அவர் கைக்கு ஒரு குடையை கொடுத்து ஒரு காலை தூக்கியவண்ணம் வரைந்திருப்பது வாமன அவதாரத்தை நினைவூட்டுகிறது.

எப்படியோ தூக்கிபோட இருந்த மேலுறைக்கு இன்னமும் சிறிது நாள் ஆயுள் அக்ரிலிக் வர்ணத்தால் கிடைத்திருக்கிறது.


Friday, January 12, 2018

ஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி


    ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற  ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass  என்பது ஒரு வகை. இது எடை குறைவான சட்டத்தில் நன்றாக இழுத்து பொடி ஆணிகளினால் பொருத்தப்பட்ட கெட்டியான துணி.

ஒரு பத்திரிக்கையில் வந்த புகைப்படத்தில் மேகங்கள், நீரில் கதிரவன் பிரதிபலிப்பு இவற்றின் அழகைக் கண்டு அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன்.  அதன் பின்னர் வேறொரு புகைப்படத்தில் கண்ட  ஒரு நாட்டியக் குழுவின் அபிநய  பங்கியை  நிழற்படமாக  மாற்றி வரைந்து அவர்கள் சூரிய வணக்கம் செய்வதாக முடித்து கொஞ்சம் நாட்கள் வரவேற்பு அறையில் மாட்டி வைத்திருந்தேன்.  பல முறை வீடுகளை மாற்றியதில் அதற்கு முக்கியத்துவம் குறைந்து எங்கோ கேட்பாரின்றி  பெட்டி அடிக்கு சென்று விட்டது. சமீபத்தில் அதை பார்த்த போது பொங்கலுக்கு ஏற்ற படம் என்று தோன்றியதால் அதை பிரசுரிக்கிறேன்.

இதற்குப் பொருத்தமாக சூரிய காயத்ரி மந்திரத்தை  படத்தின் அடிப்பக்கத்தில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் 

பாஸ்கராய வித்மஹே, மஹத் த்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யப் பிரசோதயாத்


ஆனால் கோணல்மானலாகப் போய்விட்டால் படத்தின் அழகு போய்விடும் என்ற பயத்தால் அதை எழுத தைரியம் வரவில்லை. இந்த பதிவின் மூலம் அந்த ஆசையை நிறைவு செய்து கொள்கிறேன்.

பாரதியாரும்   ஞாயிறு வணக்கம் என்ற நல்லதொரு கவிதையை செய்திருக்கிறார். அதன் வரிகளும் இதற்கு பொருத்தமானதே.

என்றனுள்ளே கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று  தன்னகத்து ஒவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா
...........................................................
--------------------------------------------
ஆதித்  தாய் தந்தை நீவிர் உமக்கே
ஆயிரம்தரம் அஞ்சலி செய்வோம்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

இன்று ( 12 ஜனவரி) வீரத் துறவி விவேகானந்தரின் ஜயந்தியும் ஆகும்.  பாரதமாதாவை மிக உயர்ந்த அரியணையில், குமரி முனைப் பாறையில் தவத்தில் கண்டு உலகிற்கு பறை சாற்றியவர். அவருக்கு ஏதாவது வகையில் அஞ்சலி செய்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சியே கீழே காணும் போட்டோஷாப் செய்யப்பட்ட படம்.

( படத்தை சுட்டினால்  எழுதியிருப்பதை படிக்க முடியும்)

அவர் கன்னியாக்குமரி பாறையில் அமர்ந்து மூன்று நாள் தியானத்தில் கண்ட காட்சியே அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது.   போட்டோ ஷாப்பில்  அதற்கு உரு கொடுக்க என்னுடைய ஓவியத்தையே பயன்படுத்திக் கொண்டேன்.  உங்களால் விவேகானந்தர் சூட்சும வடிவில் அமர்ந்திருப்பதை காண முடிகிறதா ?  _/\_

Thursday, January 4, 2018

காந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு

அனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே முயற்சி செய்யப்பட்ட மையக்கருத்து எவ்வளவு தூரம் வெற்றிப் பெற்றுள்ளது என்பதே முக்கியம்.

மகாத்மா காந்தி  எழுதுவதற்கு பென்சிலை சீவினால் அதனை கூராக்க மாட்டாராம். ‘கூராக்கினால் கரித்துகள் வீணாகுமே. அதை வைத்து எவ்வளவோ எழுதுவது பயன்படாமல்  போகுமே” என்று சொல்வாராம்.

குறைவில் நிறைவை கண்டவர் அவர் !

நேற்று சில வர்ண பென்ஸில்களை சீவிக் கொண்டிருக்கும் போது அதன் சீவல்களோடு வெளிப்பட்ட  வர்ணப் பொடிகள் காந்திஜியை நினைவு படுத்தியது. மீதியை கீழே உள்ள படத்தை சுட்டினால் விவரமாகப் படிக்கலாம்.



ஓரளவு  தாளின் மடிப்புப் பகுதியை வர்ணத்தின் மூலமாக மறைக்க  முடிந்தாலும் பென்சில் வர்ணத்தின் அடர்த்தி குறைவாகவே பட்டது. அதனால் ஒரு சிறிய தூரிகை உதவியால் அங்கங்கே சற்று நீர் வர்ணத்தில் அலைகளை வரைந்து  அங்கே ஒரு மீன்பிடிப்பவரின் வலை வீசும் காட்சியையும் சேர்த்தேன். இப்போது படம்  சற்று பரவாயில்லை என்று தோன்றியது.


இதில் என்ன பரிட்சார்த்தம் என்று தோன்றலாம். 

முதலாவது, வீணாகக் கிடந்த ( ஒருபக்கமே பயன்பட்ட ) வெள்ளைத்தாள்  தூக்கி எறியப்படக் கிடந்த பென்ஸிலின் வர்ணத் துகள்கள்  இரண்டும்சேர்ந்து ஒரு சித்திரமாகியது.  எனக்கு நேரமும் உபயோகமாகக் கழிந்தது.

   இரண்டாவதாக,  மூன்று சித்திரங்களை தனித்தனியாக   வலையேற்றி  இணைப்பதற்கு பதிலாக ஒரே சித்திரமாக  மாற்றி அதன் தொடர்பான விஷயத்தையும் - சித்திரக் கதையாக- சொல்ல முயற்சித்திருக்கிறேனே அது மகாத்மா காந்தி வழியில் சிக்கனத்தை நானும்  சிந்திக்கிறேன் என்பதை காட்டுகிறதல்லவா :)))))