Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Wednesday, September 13, 2023

இந்த புன்னகை என்ன விலை -2

 படம் பார்த்து கதை சொல்


அம்மாவுக்கு செல்லம் 

 என் செல்ல அம்மா, தங்கக் கட்டி அம்மா ...... 

 டேய் ! என்ன விஷயம் சொல்லு ... 

 என் ஆசை அம்மா ...உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் தானே ? 

 என்னடா ? என்ன வேணும் இப்போ ? 

 என் பிரண்ட்ஸ் எல்லோரும் கபடி மேட்ச் பார்க்க போறாங்க, நானும் போகட்டுமா? 

 எந்த பிரண்ட்ஸ் ? 

 சாமி, தில்லை, நாகு ..... 

 எங்க ? எவ்வளவு தூரம் ? 

 இங்கதாம்மா, மேட்டுத் தெரு கோடியில, முள்ளியாத்து மணல்ல 

 இருட்டுறதுக்குள்ள வந்திடுவியா ?

 ஓ ...! 

 சரி  சரி , நல்லா சட்டையா பாத்து போட்டுக்கிட்டு போ, பரண் மேல பொரி உருண்டை இருக்கு. பிரண்ட்ஸ்க்கும் சேர்த்து கொண்டு போ.

 சரிம்ம்மா ......என் செல்ல அம்மா ... 

 சிட்டென பறக்கிறான் குட்டிப்பையன்.

சிறுவனின் முகத்தில் ஒரு கொஞ்சலான புன்னகை.

அதே சமயம்   வேலையில் ஆழ்ந்திருக்கும்  அன்னையின் முகத்தில் ஒரு  சந்தோஷமான  நமட்டு சிரிப்பு   இரண்டையும் ஒரு சேர கொண்டுவர வேண்டும் என்பதே  இந்த படத்தின் பெரிய சவால்.  

அதனால் படத்தில்  பின்னணி  போன்ற வேறு பல விஷயங்களில்  அதிக கவனம் காட்டவில்லை. 

முழு படமும் கீழே .

Sunday, June 18, 2023

இந்தப் புன்னகை என்ன விலை?

 பேரனுக்கு  விளையாடப் போகணும்.

அன்பான தாத்தா பிடிச்சு வைச்சுப் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறார்.

அவனுக்கோ தன் நிலைமையை சொல்லி புரிய வைக்க முடியாத நிலையில் சிறிது பொறுமை காட்டுகிறான். அப்போது அவன் முகபாவம் எப்படி இருக்கும் ?

இப்படி இருக்குமா ?

பெரியவருக்கான ஒரு மரியாதை கலந்த அன்பை அச்சிறுவனின் முகத்தில் காண்பிக்க தனி முயற்சி எடுத்த சித்திரம் இது.

வெளிநாட்டு ஓவியங்களில் மோனலீசா வின் ( லியானார்டோ-டாவின்சி ) படத்தில் இருக்கும் -மர்மமான- புன்னகையை சிலாகித்து பல விற்பன்னர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

அப்படி  ஒரு புன்னகையை ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்பதன் வெளிப்பாடுதான் இது. 

மோனாலீசா போல் இதில் ஏதும் மர்மம் இல்லை.  தாத்தா பேச்சைத் தட்டமுடியாமல்  ஒரு அசட்டு சிரிப்புடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறான். அவ்வளவு தான்.

முழுப்படமும் கீழே .




தாத்தாவின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பும் ஆளுமையும்,   சிறுவனின் மனநிலையை  பார்க்க விடாமல் செய்து விடலாம் என்ற எண்ணத்தோடு முதலில் சிறுவனைத் தனியாக  zoom- in  செய்து பின்னர் முழு படத்தையும் போட்டிருக்கிறேன். 

இவர்கள் குஜராத் ராஜாஸ்தான் மாநிலங்களில் ஒட்டகங்களை மேய்ப்பவர்கள்  'ராய்கா' எனப்படும் குடியை சேர்ந்தவர்கள். சுமார் பத்து லட்சம் ஜனத்தொகையாக இருந்த இந்த குடியினர் கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு லட்சமாக சிறுத்து விட்டனராம். இதனால் ஒட்டகப் பராமரிப்பு குன்றி ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதாம். தற்போது 2019 கணக்கின்படி ராஜாஸ்தானில் 21000 ஒட்டகங்களே உள்ளன.

இந்த சீரழிவைத் தடுக்க ராஜாஸ்தானில் ஒட்டக மேம்பாட்டு ஆராய்ச்சி ஏற்படுத்தப்பட்டு இறைச்சிக்காக  செய்யப்படும்  ஒட்டக வதைக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.  ஒட்டகத்தின் பால் மிக விசேஷமான மருத்துவ குணம் கொண்டது. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கும் மிகுந்த பயன் உடையது.  மேலும் படிக்க...

ஹூம் !  இந்த  கதையெல்லாம் கேட்க விளையாடப் போகும் சிறுவனுக்கு ஏது நேரம் ?

 

Monday, May 29, 2023

கண்ணனை நினைக்காத நாளிலில்லையே...

 தமிழ் நாட்டில்  மாணிக்கவாசகர் சிவபெருமானை தலைவனாக வைத்து நாயகி பாவத்தில் திருக்கோவையார் பாடியுள்ளார். இது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதற்கான  ஏக்கப்பொருளாகும். இறைவனைத் தேடுதலால் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் எனப்படும்.  

அவர் போலவே கலிங்கப் பகுதியான ஒடிஷாவில் வாழ்ந்த ஜெயதேவரும் கண்ணனை நினைத்து உருகி பாடிய பாடல்கள் "கீதகோவிந்தம் " என்ற பெயரில் வடமொழி பக்தி இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றது.

அவருடைய பாடல்கள் சிலவற்றுக்கு உருவகம் கொடுத்து நாற்பது அல்லது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்காட்டி வெளிவந்திருந்தது.

வெறும் கோட்டு ஓவியமான அச்சித்திரங்களின் அழகில் மயங்கி  ஒரு சிலவற்றை  நான் ஒரு வரைபுத்தகத்தில் என் விடுமுறை நாட்களின் போது வரைந்திருந்தேன்.  அப்புறம் அது எங்கு போயிற்றோ, மறந்தே போனேன்.

சென்ற ஆண்டு திடீரென்று என் சகோதரிக்கு அப்புத்தகம் கிடைத்து அதிலிருந்த சில படங்களை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி வைத்தாள். மிகவும் கசங்கிப் போயிருந்த தாள்கள், கோணலான காமிரா கோணம்   ஆனாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. 

உடனே அதை மடிக்கணினிக்கு மாற்றி அதை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன்.  அதன் விளைவே கீழே உள்ள படங்கள். மென்பொருள்  Paint 3D.






எனக்கு வாட்ஸ்-ஆப்பில் வந்த வடிவம் மேலே !!!   வலதுபுற மூலையில் ஜெயதேவரின் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன் சாரம்,  'கண்ணன் தன் காலிற்கு மருதாணி இட்டு அழகு பார்க்கும் பாங்கை   ராதை வியந்து போற்றுவது' எனக் கொள்ளலாம்.

மெஹந்தி அல்லது மருதாணி  மிகப்பழமையான அலங்காரப் பொருளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எகிப்தியர்களின் பயன்பாட்டிற்கும் பழமையான ராமாயண காலத்திலிருந்தே மருதாணியின் பயன்பாட்டின் குறிப்பு நம் இலக்கியங்களில் காணப்படுகிறது. தற்காலத்தில் தென்னிந்திய திருமணங்களிலும் "மெஹந்தி" விழாவாகவே இடம் பெற்று விட்டது. அதற்காக ஏராளமாக பணம் செலவழிக்கிறார்கள்.

பாரம்பரியத்தில் பணத்தைத் தேடுவதே மனிதரின் குணமாய் போயிருப்பது கலியின் பிரபாவம். !!